தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை: இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும்.

ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (ஆக.10) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்ச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
ஆகஸ்ட் 11-ந் தேதியன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஆக. 12-ல் ஒருசில உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்; இன்று முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை தென்கிழக்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும். மீனவர்கள் இப்பகுதிக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
அரபிக் கடல் பகுதியில் இன்று முதல் ஆக.12 வரை தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடைஇடையே 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications