அடைமழை ஆரம்பம்... சனிக்கிழமை வரை மழை இருக்கு - நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வியாழக்கிழமையன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் ரெட்அலர்ட் விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3ஆம் தேதி முதலே பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. 7ஆம் தேதியன்று சென்னையில் கொட்டித்தீர்த்த மழையால் தலைநகரமே வெள்ளக்காடானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததால் கடந்த வாரம் முழுவதும் சென்னையில் அதிகனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.
கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த அதிகனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டமே உருக்குலைந்து போயுள்ளது. குமரி மாவட்டத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப் போட்டுள்ளது.

அதி கனமழைக்கு வாய்ப்பு
அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது இன்று புதன்கிழமை மேற்கு திசையில் நகர்ந்து, 18ஆம் தேதி வியாழக்கிழமை தெற்கு ஆந்திரா-வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

8 மாவட்டங்களில் மழை
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ரெட் அலர்ட்
நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனையடுத்து வானிலை ஆய்வு மையத்தால் நிர்வாக ரீதியாக வழங்கப்படும் 'ரெட் அலர்ட்'டும் மேற்சொன்ன மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு
இதுதவிர செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

5 நாட்களுக்கு அடை மழை
19ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 20ஆம் தேதி திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Recommended Video

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
மத்திய மேற்கு, தென் மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications