சென்னையில் அதிகனமழை மாலை 6 மணி வரை விமானங்கள் வராது என அறிவிப்பு
சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
சென்னை: காற்று பலமாக வீசுவதாலும், சென்னைக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் இன்று மதியம் முதல் மாலை 6 மணி வரை, சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 15 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே மழை நீர் வீடுகளுக்குள் புகுந்திருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகன மழைப் பொழிவு இருக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து கிளம்பும் 4 விமானங்களும் சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்களும் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை நேற்று அறிவித்தது. மதுரை, திருச்சி, மும்பை, ஹார்ஜா விமானங்கள் வருகை, புறப்பாடு என இருவழித் தடங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு இயக்கப்படும் மாலை நேர விமானங்களை ரத்து செய்வதாக இண்டிகோ, ஏர் அரேபியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளதால் இன்று மாலை 6 மணிவரை எந்த விமானமும் சென்னை விமான நிலையத்திற்கு வராது என விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதனிடையே சென்னையில் பல பகுதிகளில் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. மாலை 4 மணி வரை கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications