தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகாது என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பல பகுதிகளிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கனமழை வெள்ளம்
கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இது இந்த பருவமழை காலத்தில் தமிழகத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவாகும். தூத்துக்குடியில் 27 செமீ மழையும், திருச்செந்தூரில் 25 செமீ மழை பதிவானது. ஸ்ரீவைகுண்டத்தில் 18 செமீ மழையும், குலசேகரப்பட்டிணத்தில் 16 செமீ மழையும் பதிவாகியுள்ளது. வைப்பாறு பகுதியில் 15 செமீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

ஆறுகளில் வெள்ளம்
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக விவசாய நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி வருவதால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

கனமழை நீடிக்கும்
இதனிடையே இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் மிக கனமழை
நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. மீனவர்கள் மூன்று நாட்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதி தீவிர கனமழை
டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இயல்பை விட மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. 29ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகரும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டுக்கு அதிக மழைக்கு வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications