மிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை!
Recommended Video
சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 18-ஆம் தேதி ஒரே நாளில் சென்னையில் பெய்த மழையால் 21 நாட்களுக்கு தண்ணீர் பஞ்சம் தீரும் மகிழ்ச்சிகரமான சம்பவம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தது. இதையடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்கிறது.

வெப்பச்சலனம்
மத்திய மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் இந்த மழை பெய்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சாலைகளில்
முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, நொளம்பூர், அம்பத்தூர், திருவல்லிக்கேணி, அடையாறு, அயனாவரம், கூழ்பாக்கம், கோட்டூர்புரம், கோட்டூர், பெசன்ட் நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இருட்டு
அதுபோல் ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, கே கே நகர், ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் இருட்டான சூழல் நிலவுவதோடு இடி இடித்து வருகிறது.

மகிழ்ச்சி
இந்த மழை இன்னும் தொடரும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications