தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேலும் தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற்று வருகிறது.

மழை
இதனால் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் தீவிர கனமழை பெய்த காரணத்தால் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளம்
சென்னையிலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு நீர் தேங்கியது. நேற்று தீபாவளி நாளன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களிலும் குமரி, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் உள்ள சேரன்மகாதேவியில் 13 செமீ மழை பெய்தது.

இன்று
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூரில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், பெரம்பலூர், கடலூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டதோடு காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. கடல் லேசாக கொந்தளிப்பாக காண வாய்ப்புள்ளதால் அடுத்த 3 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications