தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரையில் இடியோடு மிக கனமழை... குடையோடு வெளியே போங்க
வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வந்து விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கப்போகிறது. கடந்த சில நாட்களாகவே பருவமழை பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. தேனி வீரபாண்டியில் 12, கொடைக்கானலில் 7, செஞ்சி, ராசிபுரம், திருவையாற்றில் தலா 4 செ.மீ மழை அம்பாசமுத்திரம், பாம்பன், மணியாச்சி, வால்பாறை, சோலையாறு, ராஜபாளையம்,தேவாலா, சின்னக்கல்லாறு, மகாபலிபுரம், மணிமுத்தாறு, ராமேஸ்வரம், சிவகங்கை, புதுக்கோட்டை, வலங்கைமான், தேவகோட்டை, திருப்பத்தூர் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரைக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
நாளைய தினம் தென் மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி,கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ,நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வருகின்ற 6ஆம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர் ,திண்டுக்கல் ,தேனி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 7ஆம் தேதி வட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 8ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
இன்றும் நாளையும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் ஆழமான பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications