Heavy rain: இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 3 மணி நேரம் கனமழை விடாது.. தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இதனால் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவு முதல் கனமழை மீண்டும் வெளுக்க தொடங்கியது. இன்று அதிகாலையிலும் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் கனமழை விட்டு விளாசியது. அதிகாலை 5 மணியளவில் இருந்தே மழை விடாமல் கொட்டி தீர்த்தது.

ஆரஞ்சு அலர்ட்
இதற்கிடையே இன்று தென் மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்கள் மற்றும் வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்து இருந்தது.
இந்த சூழலில் தான் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை உள்பட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடுத்த 3 மணி நேரம்
"தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு (ஆரஞ்சு அலர்ட்) உள்ளது. இதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர்
தென் மாவட்டங்கள் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியுள்ளார். இன்று அல்லது நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது எனவும், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளார்.
இதனால் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை 3 நாட்களுக்கு தொடர வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை 3 நாட்களுக்கு தொடர்ந்து பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்று நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார் ஆகிய 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications