சென்னையில் வெளுத்துக் கட்டிய கனமழை- வீடு இடிந்து ஒருவர் பலி- காயமடைந்தவர்கள் மீட்பு!
சென்னை: சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில் யானைக்கவுனி என்.எஸ்.சி. போஸ் சாலையில் பழமையான வீடு இடிந்து முதியவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. சென்னை மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை கொட்டி வருகிறது.

கடந்த காலங்களைப் போல இல்லாமல் இம்முறை சென்னையில் வெள்ள நீர் வெளியேறுவதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான இடங்களில் மழைவெள்ள நீர் தேங்காமல் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
இந்நிலையில் சென்னை புளியந்தோப்பில் கனமழையால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் சாந்தி என்ற பெண் உயிரிழந்தார். அடிகுழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. வடகிழக்கு பருவமழைக்கு சென்னையில் முதல் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்திருந்தது.
தற்போது சென்னை யானைக்கவுனி என்.எஸ்.சி போஸ் சாலையில் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்தது விழுந்தது. இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி முதியவர் ஒருவர் பலியானார். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கனமழை காரணமாக பூக்கடை மிண்ட் தெருவில் பழுதடைந்த கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், செய்தியறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயணைப்பு துறை, காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி காயம் அடைந்து மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினோம். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications