கன மழை ரெட் அலர்ட் வாபஸ் - அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அந்தமானில் உருவாகிறது
அந்தமானில் சனிக்கிழமையன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததை அடுத்து தமிழக மக்கள் நிம்மதியடைந்த நிலையில்
அந்தமானில் சனிக்கிழமையன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்தது. நேற்று காலை முதலே, தரைக்காற்று பலமாக இருந்ததால், சென்னை உள்பட கடலோர பகுதிகளிலும் கடல் சீற்றத்துடனேயே காணப்பட்டது. கடல் அலையானது 3 அடி முதல் 5 அடி உயரம் வரை ஆர்ப்பரித்து கரையில் மோதியதை பார்க்க முடிந்தது.
ஏற்கனவே சென்னை வெள்ளக்காடான நிலையில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை பிற்பகல் வரைக்கும் 15 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வெளுத்து வாங்கிய மழையால் சென்னையும், புறநகர் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது.

வெள்ளக்காடான தாம்பரம்
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், தாம்பரம் 23 செ.மீ மழையும் சோழவரம் 22 செ.மீ., எண்ணூர் 21 செ.மீ., கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் தலா 18 செ.மீ., மாமல்லபுரம் 17 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், பெரம்பூர் தலா 16 செ.மீ., தாமரைப்பாக்கம், அம்பத்தூர், எம்.ஜி.ஆர். நகர், எம்.ஆர்.சி. நகர் தலா 15 செ.மீ., சென்னை விமான நிலையம், தரமணி, அண்ணா பல்கலைக்கழகம், அயனாவரம், ஏ.சி.எஸ். கல்லூரி தலா 14 செ.மீ., செம்பரம்பாக்கம், பொன்னேரி, வில்லிவாக்கம், தாம்பரம் இந்திய விமானப்படைதளம் தலா 13 செ.மீ., சத்யபாமா பல்கலைக்கழகம், கேளம்பாக்கம், திருப்போரூர், தண்டையார்பேட்டை தலா 12 செ.மீ., பூந்தமல்லி, திருக்கழுக்குன்றம், காட்டுக்குப்பம், மேற்கு தாம்பரம் தலா 11 செ.மீ., செங்கல்பட்டு, இந்துஸ்தான் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், செய்யூர், மரக்காணம், ஊத்துக்கோட்டை தலா 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மழை
வியாழக்கிழமையன்று பிற்பகலில் படிப்படியாக சென்னையில் மழை பெய்வது குறைந்தது. அதே சமயத்தில் காற்றின் வேகம் குறையாமலேயே இருந்தது. மாலை 5 மணியளவில் ஆய்வு மையம் தெரிவித்தபடி, சென்னை அருகே தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது. சுமார் 2 மணி நேரமாக சென்னை பகுதியை தாழ்வு மண்டலம் முழுவதுமாக கடந்து சென்றதாக வானிலை மையம் தெரிவித்தது. அதி கனமழையோடு, தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், மழை எதுவும் இல்லாமல், தரைக்காற்றுடன் மட்டும் கரையை கடந்து சென்றது. இதனால் சென்னைவாசிகள் நிம்மதியடைந்தனர்.

காற்றழுத்த தாழ்வு நிலை
இதனிடையே அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 13ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

எங்கெங்கு கனமழை
சனிக்கிழமையன்று நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரியில் மழை
14ஆம் தேதி ஞாயிறன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், திங்கட்கிழமை உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications