இதென்ன இவ்ளோ சீக்கிரம் திரும்புது?.. நவ 26 முதல் 4 நாட்களுக்கு சென்னையில் கனமழை
சென்னை: நவம்பர் 26 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் நீர்நிலைகள் நிரம்பி தமிழகமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

ஆந்திரா
இதனால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள அணைகள் நிரம்பி ஊருக்குள் புகுந்துவிட்டன. வெள்ள நீர் சூழ்ந்ததால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று முன் தினம் முதல் பரவலாக மழை இல்லை. எனினும் ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது.

26 ஆம் தேதி முதல் 4 நாட்கள்
இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு மழை வெளுக்கும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நார்வே வானிலை மையம் கூறுகையில் இன்று மாலை சென்னையில் சில இடங்களில் கனமழை பெய்யும். அது போல் திங்கள்கிழமை அன்று இரவு நேரத்திலும் காலை நேரத்திலும் லேசான மழை பெய்யும். செவ்வாய்க்கிழமை 23 ஆம் தேதி காலையும் மாலையும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

25 ஆம் தேதி லேசான மழை
புதன்கிழமை ஒரு நாள் மழைக்கு ரெஸ்ட். அடுத்தது வியாழக்கிழமை 25ஆம் தேதி லேசான மழை பெய்யும். பின்னர் 26ஆம் தேதி முதல் சென்னையில் மழை வெளுக்கும். இதே நிலை 29 ஆம் தேதி வரை தொடரும் என தெரிவித்துள்ளது. அனேகமாக வங்கக் கடலில் ஏதாவது காற்றழுத்த உருவாகிறதா என தெரியவில்லை.

இன்று 8 மாவட்டங்களில் கனமழை
இன்றைய தினம் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications