நிவர் கரையை கடக்கும் போது சென்னையை மிரட்டிய புயல் காற்று... கொட்டிய கனமழை
நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியதில் இருந்தே சென்னையில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. காற்றுடன் கனமழையும் பெய்யத் தொடங்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியதில் இருந்தே பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் சென்னைவாசிகளும், புறநகர்வாசிகளும் அச்சத்துடனேயே இரவை கழித்தனர். பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஆறாக பெருகி ஓடுகிறது தண்ணீர். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. கடலூல் கடந்த 10 மணிநேரத்தில் 13 .9 செமீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 12.9 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 8.9 செமீ மழை பதிவாகியுள்ளது.

புயல் கரையை கடக்கத் தொடங்கிய நேரத்தில் பலத்த காற்றும் கனமழையும் கொட்டித்தீர்த்தது. சென்னையில் வீசிய காற்று பலத்த சத்தத்துடன் இருந்ததால் வீட்டிற்குள் இருளில் தவித்த மக்கள் அச்சமடைந்தனர்.
புயல் கரையை கடந்தாலும் காற்றுடன் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அரியலூர், கடலூர் உள்பட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயலின் தாக்கத்தினால் அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளநீர் குளம் போல தேங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications