சென்னையில் கொட்டிய கன மழை... சட்டென்று மாறிய வானிலை
சென்னையில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத்தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் காலை முதலே பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. மெரீனா, மயிலாப்பூர், மந்தைவெளி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 28ஆம் தேதி முதல் பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில் ஆரம்பம் முதலே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் சென்ட்ரல், எண்ணூர், எழும்பூர், சிந்தாரிப்பேட்டை, ராயபுரம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, கிண்டி புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், உள்ளிட்ட பகுதிகள் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
வடகிழக்குப் பருவமழை : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை - மஞ்சள் அலர்ட்
சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கு செல்பவர்களும், அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வந்தவர்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.