தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: வளிமண்டலச் சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
''தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் சேலம், ஈரோடு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஃபுல் ஸ்பீடில் தமிழக அரசு.. 'பெட்' இருப்பு அறிய.. 'நியூ' ட்விட்டர் அக்கவுண்ட்
மூன்று மாவட்டங்கள்
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்
தமிழகத்தின் நிலை
தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை, அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
சென்னை வெப்பநிலை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் மாலை முதல் காலை வரை புழுக்கம் அதிகமாக இருக்கும். இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும்.
குமரியில் மழை
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (சென்டி மீட்டரில்) கன்னியகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 6, சிவலோகம் 4, பெருஞ்சாணி அணை 3 செமீ மழை பெய்துள்ளது, உத்தமபாளையம், கோத்தகிரி, கூடலூர் பஜார் தலா 2 செமீ மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி, கொடநாடு தலா 1''.இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.