சென்னையில் காலையில் கொட்டித்தீர்த்த கனமழை - சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
வெள்ளநீர் பல பகுதிகளில் வடியத் தொடங்கிய நிலையில் காலையில் பெய்த மழையால் மீண்டும் வெள்ளம் தேங்கியுள்ளது. தி.நகரில் பெய்த மழையால் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தி.நகர் பகுதிகளில் காலை முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ளநீரினால் வேலைக்கு செல்பவர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி முதல் சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளம் தேங்கியது. வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியதால் சிரமத்திற்கு ஆளாகினர். ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் ஆறுகளில் பெருக்கெடுத்தது.
கொளத்தூர், அண்ணாநகர், கேகே நகர், தி. நகர், மாம்பலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சில தினங்களாக வெள்ளம் வடிந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
தெற்கு அந்தமான கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அடையாறு, வேளச்சேரி, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், புழல் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனிடையே வெள்ள பாதிப்பை பார்வையிட வந்துள்ள மத்திய குழுவினர், இன்று காலை சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். வடசென்னையில் வீரா செட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புரசைவாக்கம் அழகப்பா ரோடு, கொளத்தூர் சிவ இளங்கோ சாலை ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்று விளக்கி கூறினார்கள். சென்னையில் வெள்ள சேதத்தை பார்வையிட்டு ஆய்வுகளை முடித்த மத்திய குழுவினர் புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட உள்ளனர்.
Recommended Video
11 வயது சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை.. பால் வியாபாரி உள்பட 2 பேருக்கு வலைவீச்சு!