லீவ் முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் வாகனங்களால் நெரிசல்.. ஆத்தூர் டோல்கேட்டில் கட்டணமின்றி அனுமதி
சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ஆயிரக் கணக்கான வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணமின்றி பயணித்து வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டது. சனிக்கிழமையான நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. அதோடு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது. இதனால், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்கள் கடந்த வியாழக்கிழமை சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.

3 நாள் விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில், நாளை அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக, சென்னைக்கு வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் திரண்டன.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறை இன்றுடன் முடிவதை ஒட்டி ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டன. இதனால், தற்போது வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சீராக சென்று கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications