மூச்சுவிட முடியலையே! 2 கிமீ நிற்கும் வாகனங்கள்.. சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்! 3 காரணம்
சென்னை: சென்னை கத்திப்பராவில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் அதன் பின்னணியில் உள்ள 3 முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் பல முக்கிய சாலைகளில் வார இறுதி நாட்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகமானவர்கள் வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது தான்.

குறிப்பாக சென்னை புறநகர் பகுதியான பெருங்களத்தூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அதேபோல் நேற்று முன்தினம் மாலையில் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் இன்று இரவு 9 மணியளவில் திடீரென்று சென்னை கத்திப்பாராவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நேரம் செல்ல செல்ல வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது. இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
கத்திப்பாராவில் இருந்து மீனம்பாக்கம், மீனம்பாக்கம் முதல் ஈக்காட்டுத்தாங்கல் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் ஆமை வேகத்தில் நகர்ந்தன. இதுபற்றி கேள்விப்பட்ட போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டிராபிக்கை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தான் கத்திப்பாராவில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட 3 முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் முதல் காரணம் என்பது இன்று மாலையில் சென்னையில் பல இடங்களில் பெய்த கனமழை என கூறப்படுகிறது. 2வது காரணம் என்பது மின்சார வயர்கள் பதிக்கும் பணியாகும். இந்த பணியால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தப்படியாக 3வது காரணம் என்பது தொடர் விடுமுறையாகும். அதாவது இன்று வெள்ளிக்கிழமையாகும், நாளை சனி, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையாக உள்ளது. அதன்பிறகு திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி விடுமுறையாக உள்ளது. இதனால் பலரும் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் புறப்பட்டுள்ளன. இதனால் கத்திப்பாராவில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications