சித்ராவை சொந்த மகளாகவே நடத்தினோம்.. மகன் மீது அபாண்டமாக பழி.. ஹேம்நாத் பெற்றோர்
சென்னை: சொந்த மகள் போல்தான் சித்ராவை நாங்கள் நினைத்தோம் என ஹேம்நாத்தின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மறுத்துள்ளார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

போலீஸ் நடவடிக்கை
அதற்கு முன்னதாக தனது மகளை ஹேம்நாத் அடித்து கொன்று விட்டார். என் மகள் அது போல் தவறான முடிவை எடுக்கும் கோழையல்ல, வேறு யாராவது இப்படி செய்தாலே சித்ரா அறிவுரை சொல்வார். ஹேம்நாத் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கொல்லப்படவில்லை
இதையேதான் சித்ராவின் நண்பர்களும், சக நடிகர்களும் தெரிவித்தார்கள். இந்த நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் சித்ரா கொல்லப்படவில்லை என்றும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரது முகத்தில் உள்ள நகக் கீறல் அவருடையதுதான் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலைக்கு தூண்டலா
எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன், அதற்கு யாராவது அவரை தூண்டினார்களா என்பது போன்ற கோணங்களில் போலீஸார் ஹேம்நாத் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஹேம்நாத்தின் பெற்றோர் ஒரு தகவலை தெரிவித்துள்ளார்கள்.

சொந்த மகள்
இதுகுறித்து ஹேம்நாத்தின் பெற்றோர் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் சித்ராவின் இழப்பு பெரிய இழப்பு. அவர் ஏன் அப்படி செய்தார் என தெரியவில்லை. ஆனால் எங்கள் மகன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. ஹேம்நாத் மீது மொத்த பழியையும் சுமத்துகிறார்கள்.

மோசம் இல்லை
சித்ராவின் இறப்பிறகு என் மகன் காரணம் இல்லை. சித்ராவை நாங்கள் சொந்த மகள் போல்தான் நடத்தினோம். அவர்களிடம் எந்த வரதட்சிணையையும் நாங்கள் கேட்கவில்லை. மருமகளாக வந்தால் போதும் என கூறினோம். ஹேம்நாத் எப்போதாவது குடிப்பது உண்டு. ஆனால் கொலை செய்யும் அளவுக்கு மோசமானவன் இல்லை என ஹேம்நாத்தின் பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications