விஜய்க்கு ஒய் பிரிவு ஓகே! தமிழகத்தில் யார் யாருக்கு என்னென்ன பிரிவு பாதுகாப்பு தெரியுமா?
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பிரபலங்கள் யார் யாருக்கு என்னென்ன பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய் தொடங்கினார். இந்த கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவரது கட்சி 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி பயணிக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்ட நிலையில் தற்போது ஆண்டு பொதுக் கூட்டத்தையும் தவெக விரைவில் நடத்த போகிறதாம். மேலும் மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறாராம் விஜய்.
விஜய்க்கு பாதுகாப்பு: இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்குத்தான் உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக பிரதமருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
பிறகு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், உள்ளிட்டோருக்கு உளவுத் துறையின் மூலம் கிடைத்த அச்சுறுத்தலின் அடிப்படையில் 5 வகையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இதில் இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த பிரிவில் 10-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமான்டோக்கள் உள்ளிட்ட 36 வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பர்.
இசட் பிளஸ்: அடுத்தப்படியாக இசட் பிளஸ் பிரிவில் மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்த முதல் 6 வீரர்கள் உள்பட 22 வீரர்களை கொண்ட குழு பாதுகாப்பு வழங்கும். ஒய் பிளஸ் பாதுகாப்பில் 2 முதல் கமான்டோக்கள் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் பாதுகாப்பு வழங்குவார்கள்.
பாதுகாப்புக்கு செலவு எவ்வளவு: ஒய் பிரிவை பொருத்தமட்டில் 1 அல்லது 2 கமான்டோக்கள் உள்பட 8 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த பாதுகாப்புகள் யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ அவர்கள் எல்லாம் எங்கு பயணித்தாலும் அவரது வாகனத்துடன் ஒன்று அல்லது இரு பாதுகாப்பு வாகனங்கள் செல்லும். இந்த பாதுகாப்புக்கு மாதம் ரூ 12 லட்சம் செலவிடப்படுகிறது.
விஐபிகளுக்கென எக்ஸ் பிரிவு உள்ளது. இதில் துப்பாக்கி ஏந்திய இரு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இந்தியாவை பொருத்தவரை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்பட 51 பேருக்கு இசட் பிளஸ்ஸும் பாபா ராம் தேவ், அமீர் கான் உள்ளிட்ட 68 பேருக்கு இசட் பாதுகாப்பும் 86 பேருக்கு ஒய் பிளஸ்ஸும் 79 பேருக்கு ஒய் பிரிவும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தை பொருத்தவரை பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு இசட் பிரிவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், மு.க.அழகிரி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோருக்கு ஒய் பிளஸ்ஸும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு எக்ஸ் பாதுகாப்பும் கொடுக்கப்படுகிறது.
மேலும் தற்போது தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு 8 பேர் அடங்கிய காவலர்கள் பாதுகாப்பு கொடுப்பர். இந்த படை பிரிவுகளில் மத்திய பாதுகாப்பு படையினர் இருப்பர். மாநில காவல் துறையினர் இடம் பெற மாட்டார்கள். ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications