மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது - ஐகோர்ட் கிளை உத்தரவு!
மதுரை: மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என உயர்நீதிமன்ற கிளையின் 3 நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 3 நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
சாலைகளிலும், தெருக்களிலும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகின்றன. கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளின்போது கொடிக் கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படுகிறது.
யார் எவ்வளவு உயரத்தில் கொடிக் கம்பங்கள் அமைப்பது என்பதில் அரசியல் கட்சிகளிடம் போட்டிகள் ஏற்படுகின்றன. பொது இடங்கள், உள்ளாட்சி இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த சட்டத்திலும் அனுமதி, உரிமம் வழங்கவில்லை. நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்க போலீசாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் அதிகாரம் இல்லை.
எனவே தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த 2 வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்பிடம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் நிரந்தரமாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த அதிகாரியும் அனுமதி வழங்கக் கூடாது. அரசியல் கட்சியினர், சமுதாயம் மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முறையாக அனுமதி பெற்று அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கொடிக் கம்பங்களை வைக்கலாம். தனியார் இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
பிரச்சாரம், பொதுக்கூட்டம், தர்ணா மற்றும் கூட்டங்களின்போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் நடலாம். இதற்கு முன்கூட்டியே வாடகை வசூலித்துக்கொண்டு அதிகாரிகள் அனுமதி வழங்கலாம். அனுமதி காலம் முடிந்த பின்னர் தற்காலிகக் கொடிக் கம்பங்கள் அகற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
கொடிக் கம்பங்கள் நடப்பட்ட இடம் சுத்தம் செய்யப்பட்டு, அதற்காக தோண்டிய குழிகள் மூடப்பட்டு பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதில் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்தது. இந்த வழக்கில், தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி எஸ்.எஸ்.சவுந்தர், நீதிபதி ஆர்.விஜயகுமார் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அறிவித்தார்.
இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என உயர்நீதிமன்ற கிளையின் 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொடிக் கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க












Click it and Unblock the Notifications