“ஆதவ் அர்ஜுனாவுக்கு சமூகத்தில் மதிப்பு கிடையாது.. அவரது போஸ்ட்டால் பாதிப்பு இல்லை” - நீதிமன்றம்
சென்னை: GenZ புரட்சியை தூண்டும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "ஆதவ் அர்ஜுனா அரசியலில் புதியவர் என்பதால், எஸ்.வி.சேகருக்கு இருப்பது போல சமூகத்தில் இவருக்கு எந்த மதிப்பும் இல்லை" என்று கூறி வழக்கிலிருந்து அவரை விடுவித்திருக்கிறது.
கடந்த செப். 27ம் தேதி கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் தொடர்பாக தவெக மீதும் விஜய் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், செப்.29ம் தேதி அதிகாலை தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, x தளத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அது GenZ புரட்சியை தூண்டும் விதமாக இருந்ததாக வந்த புகாரையடுத்து, சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த ட்வீட் டெலீட் செய்யப்பட்டாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து உயர்நீதிமன்றம் ஆதவ் அர்ஜுனாவை விடுவித்திருக்கிறது. இதற்கான காரணத்தை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கூறியிருப்பதாவது,
"அரசியலமைப்பின் 19(1)(அ) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. இது அடிப்படை உரிமைகளில் ஒன்று. இருப்பினும், இந்த உரிமை முழுமையானது அல்ல. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலப் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்பு உறவுகள், பொது ஒழுங்கு, கண்ணியம் அல்லது ஒழுக்கம் அல்லது நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் ஆகியவற்றின் நலன்கருதி பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
மனுதாரர் இதேபோன்ற மற்றொரு வழக்கை குறிப்பிட்டு. எஸ்.வி.சேகரை மேற்கோள் காட்டியிருந்தார். ஆதவ் அர்ஜுனா அரசியலில் புதியவர் என்பதால், எஸ்.வி.சேகருக்கு இருப்பது போல சமூகத்தில் இவருக்கு எந்த மதிப்பும் இல்லை. எனவே, ஆதவ் எழுதியதினால் சமூகத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது என்று கருதுகிறோம்.
சமூக வலைத்தளத்தில் அதிகாலை நேரத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார். அவருடைய பதிவு, வன்முறையையோ அல்லது போராட்டத்தையோ தூண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுவும், மிகக் குறைந்த சதவீத மக்களால் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பார்க்கப்பட்டபோது" என்று நீதிபதி கூறியிருக்கிறார். இதனையடுத்து இந்த வழக்கிலிருந்து ஆதவ் அர்ஜுனா விடுவிக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications