அரசு வேலை ஓய்வு வயது உயர்வு.. இளைஞர்கள் சேருவதற்கான வயது வரம்பையும் தளர்த்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளதால், வேலை தேடும் இளைஞர்கள் பணியில் சேரும் வயது வரம்பை தளர்த்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள அதே வேளையில், நிவாரண பணிகளுக்கும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஈட்டு விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியன ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பல இளைஞர்களின் கனவு கேள்விக்குறியாகும் என்பதால், அவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை அமைந்தகரையை சேர்ந்த சூர்யா வெற்றி கொண்டான் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், அரசு வேலையில் சேர்வதற்கான அதிகபட்ச வயது 35 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த ஆண்டு 34 வயதை கடந்தோர் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர்.. சலூன் கடைகளுக்கும் சலுகை.. கிராமத்து ஆண்களின் வயிற்றில் பால் வார்த்த முதல்வர் எடப்பாடியார்
ஓய்வு நீட்டிப்பு அறிவிப்பால், பாதிக்கப்படக்கூடிய நபர்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கும் வகையில், தகுந்த உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் அல்ல எனவும், அரசுப் பணிகள் தொடர்பான விவகாரங்களில் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது எனத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.