தமிழ்நாடு அரசு ரிலாக்ஸ்.. நில வழிகாட்டி மதிப்பு உயர்வு! ரத்து செய்த உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
சென்னை: தமிழ்நாட்டில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக் குழு செயல்பட்டு வருகிறது. 2023 - 24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், சொத்துக்களின் விலை அதிகரித்து உள்ளதால் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாகவும், மதிப்பீட்டுக் குழு வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் மதிப்பீடு நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, 2017 ஆம் ஆண்டில் அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், புதிய மதிப்பீட்டை நிர்ணயித்து 2023 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென 2023 மார்ச் 30 ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விதிகளின் அடிப்படையில் துணைக் குழுக்களை அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வு செய்து, பொதுமக்கள் கருத்துகளை பெற்று அதன் பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியும் என்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்எம் சுப்பிரமணியம், கே ராஜசேகர் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கிரடாய் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications