வென்றது சாதி மறுப்பு காதல்... பொண்ணு மேஜர்.. தாராளமாக கணவருடன் போகலாம்.. ஹைகோர்ட் உத்தரவு
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்
சென்னை: தன்னை யாரும் கடத்தவில்லை. சொந்த விருப்பத்தின்பேரிலேயே சென்றதாக சவுந்தர்யா கோர்ட்டில் தன்னிலை விளக்கம் அளித்தார்.. இதையடுத்து, காதல் கணவர் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல சவுந்தர்யாவுக்கு சென்னை ஹைகோர்ட் அனுமதி அளித்துள்ளது... சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
அதிமுகவின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.. 3 நாளைக்கு முன்பு அவரை சாதி மறுப்பு திருமணமும் செய்து கொண்டார்.. ஆனால், இந்த கல்யாணத்துக்கு சவுந்தர்யா குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.. சவுந்தர்யாவின் அப்பா குருக்கள் சுவாமிநாதன், தீக்குளிக்கவே முயற்சி செய்தார்.
இதற்கு சுவாமிநாதன் சொல்லும் காரணம், "பிரபுவை எனக்கு 13 வருஷத்துக்கு மேல பழக்கம்.. எங்க வீட்டுக்கு மகன் மாதிரி.. அடிக்கடி வந்து போவார்.. என் பொண்ணுக்கு இப்போதான் 19 வயசு ஆகுது.. பிரபுக்கு 39 வயசாகுது. 10 வருஷமா என் பொண்ணை லவ் பண்றதாக சொல்றார்.. அப்படின்னா 9 வயசுலேயே என் பொண்ணை லவ் பண்ணாரா? 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏத்துக்கறது? நான் சாதி பார்க்கிறவன் இல்லை.. மதம் பார்க்கிறவன் இல்லை.. காதலுக்கும் நான் எதிரி கிடையாது... ஆனால், 20 வயசு அதிகமான நபருக்கு எப்படி என் பொண்ணை தர்றது? என் பொண்ணை சின்ன வயசில இருந்து தூக்கி வளர்த்தவர். இதான் ஜீரணிக்க முடியல" கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

வீடியோ
இந்தசமயத்தில்தான், மணமக்கள் பிரபுவும் சவுந்தர்யாவும் தனித்தனியாக வீடியோ ஒன்றினை வெளியிட்டு, அதில் தங்கள் முழு சம்மதத்துடன்தான் இந்த கல்யாணம் நடந்ததாகவும், கடத்தியோ, கலை மிரட்டல்விடுத்தோ கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தனர்.

ஹைகோர்ட்
இதனிடையே, சென்னை ஐகோர்ட்டில், குருக்கள் சாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.. அந்த மனுவில், தனது மகள் சவுந்தர்யாவை எம்எல்ஏ பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டதாகவும், இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், தனது மகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென சுவாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையிடப்பட்டது.

விசாரணை
அதன்படி, வழக்கை பட்டியலிடும்படி நீதிபதிகளும் உத்தரவிட்டிருந்ததால், எப்படியும் நேற்றே விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கு விசாரணைக்கு வராததால் மீண்டும் முறையிடப்பட்டது... இதையடுத்து இன்று, சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது தந்தையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

உத்தரவு
கோர்ட் உத்தரவிட்டிருந்தபடியே, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவியை ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஐகோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.. நீதிபதி முன்பும் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணையும் தொடர்ந்து நடந்து வந்தது.. அப்போது, தனது சொந்த விருப்பத்திலேயே சென்றதாகவும், யாரும் தன்னை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லவில்லை என்றும் சவுந்தர்யா தன்னிலை விளக்கம் அளித்தார். அதை பதிவு செய்த நீதிபதிகள், பெண் மேஜர் என்பதால் காதல் கணவர் பிரவுடனேயே செல்ல சவுந்தர்யா, அனுமதித்து அளித்து, இந்த வழக்கையும் முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications