வாரிசுச் சான்றிதழ் வாங்க போறீங்களா.. சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.. உடனே பாருங்க
சென்னை: பொய் தகவல்களைக் கூறி, வாரிசுரிமைச் சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ஐந்து வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க, தமிழக வருவாய் நிர்வாக துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரண்ணன் என்பவர், தந்தையின் மரணத்துக்குப் பின், வாரிசுரிமை சான்று வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரருக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதுசம்பந்தமான விசாரணையில், மாரண்ணனின் தந்தை மாரண்ண கவுடருக்கு இரு மகள்கள், இரு மகன்கள் உள்ள நிலையில், தான் மட்டுமே வாரிசு எனக் கூறி மாரண்ணன் விண்ணபித்துள்ளதாகக் கூறி, அதை நிராகரித்து தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாரண்ணன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பொய் தகவல்களைக் கூறியும், உண்மையை மறைத்தும், வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பொய் தகவல்களைக் கூறி, வாரிசுரிமை சான்று பெற்று, சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
உண்மை தகவல்களை மறைத்து வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிக்கப்படுவது தொடர்பான வழக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ஐந்து வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்கவேண்டும் என, தமிழக வருவாய்நிர்வாகத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுபோல் குற்ற வழக்கு தொடராமல் உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்கவேண்டும் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications