கவுன்சிலருக்கே இந்த நிலையா? கட்டப் பஞ்சாயத்து விவகாரம்: செங்கல்பட்டு ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி ஆணை
சென்னை: கவுன்சிலரை கட்டப் பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "மக்கள் பிரதிநிதியான கவுன்சிலருக்கே இந்த நிலையா?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
செங்கல்பட்டு மாவட்டம், இடக்கழிநாடு பேரூராட்சி வார்டு கவுன்சிலராக உள்ள வீரராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "இடக்கழிநாடு பேரூராட்சி எல்லைக்குள் உள்ள பனையூர் பெரியகுப்பம் மக்களுக்கும், பனையூர் சின்னகுப்பம் மக்களுக்கும் நீண்டகாலமாக பகை உள்ளது. பெரியகுப்பத்தைச் சேர்ந்த நான், கவுன்சிலர் என்ற முறையில் சின்னகுப்பத்தில் நடந்த சாலை சீர் செய்யும் பணியை பார்வையிட கடந்த செப்டம்பர் 15 ஆம்தேதி சென்றபோது, ஊர் தலைவர்கள் நாகராஜ், முத்து, தினகரன், அரிதாஸ், குமாரவேல், சேகர், மனோகர் ஆகியோர் அங்கு வந்து என்னை பயங்கரமாக திட்டினர்.

அதுமட்டுமல்ல, என்னையும், என் குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். இதனால் ஊரை விட்டு வெளியேறி மரக்காணத்தில் உறவினர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போதும் என்னை கிராமத்துக்குள் அனுமதிக்கவில்லை. ஊர் தலைவர்களின் இந்த செயல் சட்டவிரோதம். இதுகுறித்து செய்யூர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.
காவல்துறை விசாரணையில் ஊர் பஞ்சாயத்தில் எடுத்த முடிவை ஒன்றும் செய்ய முடியாது என்று தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் கூறிவிட்டனர். காவல்துறையும் அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கட்டப் பஞ்சாயத்து செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தனது கவுன்சிலர் பணியை தொடர்ந்து செய்ய வழிவகை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "மக்கள் பிரதிநிதியான கவுன்சிலருக்கே இந்த நிலையா?" என்று கேள்வி எழுப்பினார். பின்னர், "இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து கூட்டம், தங்களை சுப்ரீம் கோர்ட் என்று நினைத்து செயல்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை நேரில் வரவழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், "இந்த விவகாரம் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். ஊர் பஞ்சாயத்தார் என்று கூறப்படும் நாகராஜ், முத்து உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இதுகுறித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும், கவுன்சிலருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து காவல்துறை முடிவு செய்யவேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications