"முதல்வர் & போலீஸை அப்படி சொன்னது தப்புதான்" வருத்தம் தெரிவித்ததால் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து!
சென்னை: ஜாமீன் நிபந்தனையை பூர்த்தி செய்ய காவல் நிலையத்துக்கு கையெழுத்து போட வந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் காவல் துறை, அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக பிரமுகர் நரேஷ்குமார் என்பவரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், திருச்சியில் தங்கியிருந்து, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் நிபந்தனை விதித்திருந்தது.

இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யும் வகையில் 2022 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சென்று, காவல்துறை, அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில், ஜெயக்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து ஜெயக்குமார் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் காவல் துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதற்கு மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதற்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை எனக் கூறி, வழக்கை ரத்து செய்ய காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆதரவாளர்கள் அவர்களாகவே காவல் நிலையம் வந்ததாகவும், ஆதரவாளர்கள் எழுப்பிய அத்தனை கோஷங்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல் நிலையத்துக்கு திட்டமிட்டு ஆதரவாளர்களை கூட்டவில்லை என்பது தெரியவந்துள்ளதாவும், ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளதாகக் கூறி, ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications