ஆன் லைன் ரம்மி: தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மனு தொடர்பாக டிசம்பர் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Recommended Video

ஆன் லைன் விளையாட்டால் பணத்தை இழந்த விரக்தியில் தமிழகத்தை சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து, ஆன் லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜங்லி கேம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல எனவும் திறமையை வளர்க்கும் விளையாட்டு என கடந்த 1968 ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், தங்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆன் லைன் ரம்மி விளையாட்டில் பணம் செலுத்தியும் செலுத்தாமலும் விளையாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை விதிக்கப்படாத நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் மட்டுமே தடை விதிக்கப்பட்டது தவறானது எனவும் வாதிடப்பட்டது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில், ரம்மி விளையாட்டு சூதாட்டமாக கருத முடியாது என்பதால் ஆன் லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனு தொடர்பாக டிசம்பர் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications