ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. போலீஸ் மனு டிஸ்மிஸ்
சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகர காவல்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி கலைஞர் வாசகர் வட்டம் சார்பில், நடத்தப்பட்ட கருத்தரங்கில், பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதுதொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மே 23ம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, மே 31ம் தேதி வரை இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும், மாஹிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார் , இரு மனுக்கள் மீதான தீர்ப்புகளை இன்று தள்ளிவைத்தார்.
ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்று உத்தரவிட்ட நீதிபதி நிர்மல்குமார், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுத்து மத்திய குற்றப்பிரிவின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தன்றே அவரது ஜாமீன் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கை இதற்கிடையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிராக பிறர் தொடர்ந்த வழக்குகளை சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications