திருப்பத்தூர் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவா? மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!
சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.பாலகுறிச்சி, ஆர்.சீகம்பட்டி உள்ளிட்ட 6 கிராமங்கள் திருப்பத்தூர் தொகுதியுடன் இணைக்கப்பட்டதை கண்டித்து, சுமார் 2,012 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்திருந்தனர். அந்த பகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கிடையில், வாக்குச்சாவடியில் வாக்களித்தவர்களின் விவரம் அடங்கிய படிவம் 17ஏ உள்ளிட்ட தேர்தல் ஆவணங்களை ஆய்வு செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அதில், 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகளில் எந்த ஒரு வாக்குச்சாவடிக்கும் மறுதேர்தல் பரிந்துரைக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்கள் திருப்பத்தூர் சட்டசபை தொகுதிக்குள் கொண்டு வரப்பட்டதால் அந்த 6 கிராமங்களைச் சேர்ந்த 2,012 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரி லட்சுமணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்துல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் முடிந்த பிறகு எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியுடன் ஆர்.பாலகுறிச்சி, சீகம்பட்டி, ரெகுநாதபட்டி, கோபால் பட்டி, வைரவன்பட்டி, விடத்தலான்பட்டி ஆகிய 6 கிராமங்கள் சேர்க்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிமுக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் கேசி திருமாறன், தவெக சார்பில் சீனிவாச சேதுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரம்யா மோகன் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications