ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம்.. மனைவியின் அவசர முறையீட்டை ஏற்க மறுத்தது உயர் நீதிமன்றம்!
சென்னை: ஆயுள் தண்டனைக் கைதி பிரபல தாதா நாகேந்திரன் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை தங்கள் தரப்பு மருத்துவர் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அவரது மனைவியின் அவசர முறையீட்டை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
பிரேதப் பரிசோதனைக்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மேற்கொள்வார்கள் என நீதிபதி சதீஷ் குமார் பதில் அளித்துள்ளார். எனினும், நாகேந்திரன் மனைவியின் மனு பிற்பகல் 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன், அவரது மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், வழக்கறிஞர் அருள், ராமு, திருமலை, மணிவண்ணன், சிவா, அப்பு என்ற விஜய், கோழி என்ற கோகுல், சந்தோஷ், செல்வராஜ், அஞ்சலை, பொற்கொடி, மலர்கொடி என மொத்தம் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் முதல் குற்றவாளியாக (A1) ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரவுடி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
நாகேந்திரன் ஆரம்ப காலத்தில் ரவுடி வெள்ளை ரவியுடன் இருந்தார். அப்போது வியாசர்பாடி ரவுடியான சேராவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரது ரைட் ஹேண்ட் ஆன சுப்பையா என்பவரை வெள்ளை ரவியுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்றார். இதில் உயிர் தப்பிய சுப்பையாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை செய்தார் நாகேந்திரன்
கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டபோது, தொழில் போட்டியிலும் ஒருவரைக் கொலை செய்து சிறை சென்று திரும்பினார். இந்த கொலை தொடர்பாக அதிமுக பேச்சாளரான ஸ்டான்லி சண்முகம் என்பவர் மேடையில் பேசினார். இதனால் அவரை 1997 ஆம் ஆண்டு வியாசர்பாடியில் வீடு புகுந்து கொலை செய்தார். இந்த வழக்கில் நாகேந்திரனுக்கு 1999 ஆம் ஆண்டில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என 2003-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்பின் புழல் சிறையில் இருந்து கொண்டே, கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆள் கடத்தல், செம்மரக் கடத்தல் போன்றவற்றுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து வந்தார் நாகேந்திரன். அத்துடன், வடசென்னையையும் தனது ஆட்கள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இதற்கு மூளையாக செயல்பட்டதாக, சிறையில் இருந்த நாகேந்திரன் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மகனான அஸ்வத்தாமன் உட்பட 27 பேர் கைதாகினர். இந்நிலையில்தான் நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நாகேந்திரன் நேற்று காலை 10.30 மணியளவில் உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனைக் கைதி பிரபல தாதா நாகேந்திரன் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை தங்கள் தரப்பு மருத்துவர் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது மனைவி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அவரது மனைவியின் அவசர முறையீட்டை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
பிரேதப் பரிசோதனைக்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் மேற்கொள்வார்கள் என நீதிபதி சதீஷ் குமார் பதில் அளித்துள்ளார். எனினும், நாகேந்திரன் மனைவியின் மனு பிற்பகல் 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications