திருப்பரங்குன்றம் சந்தனக்கூடு விழா.. தர்கா நிர்வாகம் தொடர்ந்த வழக்கு.. மதுரை ஐகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி மற்றும் சந்தனக்கூடு விழாவை சிக்கந்தர் தர்கா நிர்வாகம் நடத்துகிறது.

விலங்கு பலியிடுதல் மற்றும் அசைவ உணவு பரிமாறுதல் கந்துாரியின் ஒரு முக்கிய பகுதி. மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ். ஸ்ரீமதி விசாரித்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, உருஸ் திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும்.
இந்த விழாவில், 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.
சட்டம் - ஒழுங்கை காவல்துறை நிலைநாட்ட வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, ஆட்சியர், காவல் ஆணையர், கோவில் மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் ஜனவரி 20 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தர்கா நிர்வாகம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனி நீதிபதி இடைக்கால உத்தரவே பிறப்பித்துள்ளார் என்றும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறியும் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications