இந்திக்கு இங்கே இடமில்லை.. இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.. முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை. மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது. நம் தமிழுணர்வு சாகாது, இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார். மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி தமிழை காக்க உயிர்நீத்த தியாகிகளைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு அனுசரிக்கப்பட்டு வருகிறது.இன்றைய நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை சென்று உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோர் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், தியாகிகளை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்தி திணிப்பை இன்றும் என்றும் எதிர்ப்போம் என திட்டவட்டமாக கூறியுள்ளார். ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! #LanguageMartyrsDay #StopHindiImposition" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications