சென்னை மத்திய அரசு ஆபீசில் இந்தி பெயர் பலகை தார்பூசி அழிப்பு- மதுரை, கடலூர், ஆண்டிபட்டியில் பேரணி!
சென்னை: மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் இன்றும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மத்திய அரசு அலுவலகத்தில் இந்தி பெயர் பலகை அழிக்கும் போராட்டம் நடைபெற்றது. கடலூர் பெரியார் கலை கல்லூரி மாணவர்களும் மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இன்று போராட்டம் நடத்தினர்.
புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் மத்திய பாஜக அரசு திணிக்க முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாள்தோறும் தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டின் பொள்ளாச்சி, பாளையங்கோட்டை, சங்கரன் கோவி, பாவூர் சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்தி மொழியிலான பெயர் பலகைகள் தார்பூசி அழிக்கப்பட்டன. இது தொடர்பாக போராட்டம் நடத்திய திமுகவினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சென்னை ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் பிஎஸ்என் அலுவலகம் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகள் தார்பூசி அழிக்கப்பட்டன. தமிழ் வாழ்க! இந்தி மொழி திணிப்பு ஒழிக! என்ற முழக்கங்களுடன் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதேபோல கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மும்மொழிக் கொள்கை மூலமான இந்தி திணிப்பு, மத்திய அரசின் யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

தேனி ஆண்டிபட்டியில் திமுகவினர் மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்தினர். மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு தர மறுப்பதற்கும் கண்டனம் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications