மதுரை வாசிகளுக்கு தலைகுனிவு.. தமிழனை கேவலப்படுத்தறாரு தமிழச்சி! சு.வெங்கசேடனிடம் சீறிய இந்து முன்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய எம்.பி சு.வெங்கடேசன் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. மதுரைக்காரர்கள் வெங்கடேசனை தேர்ந்தெடுத்ததற்கு இப்படி ஒரு தலைகுனிவா? தரமற்ற மனிதர்களை தேர்ந்தெடுப்பது நமது தலையில் நாமே வைத்து கொள்ளும் கொள்ளிக்கட்டை என்றும் இந்து முன்னணி விமர்சித்துள்ளது.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேசும்போது, "செங்கோலை கையில் வைத்திருந்த மன்னர்கள் பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்தார்கள் தெரியுமா? செங்கோலை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வைத்ததன் மூலம் பெண்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறீர்கள்?

Madurai su venkatesan BJP Hindu Munnani

வெங்கடேசன்: செங்கோல் என்பது மன்னராட்சி குறியீடு மட்டுமின்றி அறம் மற்றும் நேர்மையின் குறியீடு என்ற சு.வெங்கடேசன், பாஜகவுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

தேர்தல் முடிந்தது உத்தரப் பிரதேசத்திலே போய் தமிழர்களைப் பற்றி நீங்கள் என்ன பேசினீர்கள்? பீகாரிலே என்ன பேசினீர்கள் ? ஒடிசாவிலே என்ன பேசினீர்கள்? உங்களுக்கு அந்த அரசியல் அறமும், நேர்மையையும் இருந்திருந்தால் நீங்கள் அதைத் தமிழ்நாட்டில் பேசியிருக்க வேண்டும். எந்த ஆட்சியாளரும் இவ்வளவு இழிவாகத் தமிழர்களை பேசியதில்லை" என்றெல்லாம் பேசியிருந்தார் வெங்கடேசன்.

கண்டனம்: சு.வெங்கடேசனின் இந்த பேச்சுக்கு பாஜக கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகிறது. அந்தவகையில், இந்து முன்னணியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் பேசிய மதுரை தொகுதி சிபிஎம் எம்பி வெங்கடேசன், தமிழர் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் செங்கோலையும், தமிழ் பெண்களையும் கேவலப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செங்கோல் என்பது நடுநிலை தவறாத ஆட்சிக்கான அதிகாரத்தின் குறியீடாக விளங்குவது என தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

துலாக்கோல்: ஆட்சி செய்யும் மன்னனின் செங்கோல் தன்மையை திருவள்ளுவர், திருக்குறளில் எடுத்துக் கூறுகிறார். நீதிமன்றத்தின் நடுநிலையை துலாக்கோல் அடையாளப்படுத்துவது போல செங்கோல் என்பது ஆட்சியின் அடையாளமாகும்.

மதுரையை ஆண்ட மன்னன் நெடுஞ்செழியன் அவசரப்பட்டு கோவலனுக்கு மரண தண்டனை விதித்தார். நீதிகேட்டு பாண்டிய மன்னனிடம் கண்ணகி வாதிட, பாண்டிய மன்னன் தனது நீதி வழுவியதை உணர்ந்ததை செங்கோல் தாழ்ந்ததை எண்ணி வருந்தி அங்கேயே உயிர்துறக்கிறான். அத்தகைய மதுரையம்பதியில் அன்னை மீனாட்சி அரசாட்சி செய்வதால் செங்கோல் தரும் வைபவம் இன்றும் நடக்கிறது‌ என்பதை மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மறந்தது கேவலம்.

செங்கோல்: இன்றளவும் ஆன்மிகம் வளர்த்தெடுக்கும் ஆதீனங்கள் ஆட்சியாளர்களுக்கு செங்கோல் அளித்து நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்ய வாழ்த்தும் பாரம்பரியத்தின் அடையாளமாக செங்கோல் விளங்குகிறது.

நாடு சுதந்திரம் அடைந்ததும் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி மாறியதற்கு அடையாளமாக முதலாக பதவியேற்ற அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, அவரிடம் சோழர் கால மாதிரி தங்க செங்கோலை, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த குரு வழங்கினார். அதை முன்னாள் பிரதமர் பெற்றுக் கொண்டார் என்பது வரலாறு.

அந்தப்புரம்: ஆனால் வெங்கடேசனுக்கு இத்தகைய சிறப்புகள் கண்களுக்கு தெரியவில்லை. அரசர்களின் அந்தப்புரம் தெரிகிறது என்றால் இவரது கட்சி இடம்பெற்ற கூட்டணியில் முன்பு ஆட்சி செலுத்திய முன்னாள் பிரதமரைப் பற்றி இவரது கண்ணோட்டம் என்ன? இதே பார்வையில் பேசுவாரா?

வெங்கடேசனின் கட்சியான கம்யூனிஸ்ட் செங்கொடி ஆட்சியில் தான் சீனாவின் செஞ்சதுக்கத்தில் மனித உயிர்களை வேட்டையாடி கொன்று குவித்தனர். கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கக் கூடாது; கட்சி தலைவர்களை வைத்து கட்ட பஞ்சாயத்து மூலம் தீர்வு காண வேண்டும் என்று கேரள கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறியபோது இவர் எங்கு இருந்தார்?

தமிழச்சி: செங்கோல் மற்றும் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் குறித்து வெங்கடேசன் கேவலமாக பேசியபோது திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கைதட்டி ரசிக்கிறார். தமிழச்சி என்ற பெயரை வைத்திருக்கும் இவர் தமிழர்களை பற்றி கேவலப்படுத்துவதை ரசிக்கிறார். தமிழ் மன்னர்கள் சேரன் செங்குட்டுவன், நெடுஞ்செழியன் என பெயரை சூட்டி பெருமை பேசிய திமுகவில் தமிழ் மன்னர்கள் அந்தப்புர வீரர்கள் என பேசுவதை கண்டிக்க ஒருவர்கூட இல்லையே.

திமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் இந்து விரோத கட்சிகள் மட்டுமல்ல தமிழ், தமிழர் விரோத கட்சிகள் என ஆகிப்போனதை தமிழர்கள் உணர வேண்டும். அதிலும் பண்பாட்டின் பெருமைமிகக் கொண்ட மதுரைக்காரர்கள் வெங்கடேசனை தேர்ந்தெடுத்தற்கு இப்படி ஒரு தலைகுனிவா? தரமற்ற, தகுதியற்ற மனிதர்களை நமது பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பது நமது தலையில் நாமே வைத்து கொள்ளும் கொள்ளிக்கட்டை என்பதை உணர வேண்டும்.

அசிங்கம்: தமிழ், தமிழ்நாடு எனப் பேசி பேசியே ஏமாற்றிய திமுகவின் உண்மை முகத்தை திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேசி அசிங்கப்படுத்தி உலகறியச் செய்துவிட்டார்.

தமிழனை, தமிழ் இலக்கியங்களை, தமிழர் பண்பாட்டை, பாரம்பரியத்தை கேவலப்படுத்திய வெங்கடேசனும் அதனை கைதட்டி வரவேற்ற திமுக எம்.பி.களும் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று இந்து முன்னணி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+