கொரோனா.. சென்னையில் வீட்டு மனை விற்பனை 44% சரிந்து போச்சாம்.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்கு!
சென்னை: சென்னையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக வீட்டு மனை விற்பனை 44 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஊரடங்குகள் காரணமாக, மக்கள் சொந்த ஊர்களை நோக்கி சென்றதும், மக்கள் கையில் பணப் புழக்கம் இல்லாததும், ரியல் எஸ்டேட் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அனரோக் புராப்பர்டி கன்சல்டன்ட்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் வெளியான தகவல்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வீடுகள் விற்பனை குறைவு
நடப்பு ஆண்டின் 2வது காலாண்டில் 1590 வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிட்டால் 44 சதவீதம் குறைவாகும். ஏனெனில் அப்போது 2850 வீட்டு மனைகள் விற்பனையாகியிருந்தன. இரண்டாவது காலாண்டில் சென்னையில் 3110 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்கு காத்திருக்கின்றன. இது முதல் காலாண்டை விட 33 சதவீதம் குறைவாகும். அதாவது தேவை குறைந்ததால், உற்பத்தி குறைந்துள்ளது.

தாக்கங்கள்
இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைவர் அனுஜ் புரி கூறுகையில், கொரோனா இரண்டாவது அலை மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அது ரியல் எஸ்டேட் துறையிலும் நன்கு தெரிகிறது. அதேநேரம், மக்கள் சோர்ந்து போகவில்லை. கடந்த வருடம் முதலில் கொரோனா அலை மற்றும் ஊரடங்கு அமலுக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட அளவுக்கு இப்போது ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்படவில்லை என்றார்.

தற்போது முன்னேற்றம்
தற்போது பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் ரியல் எஸ்டேட்டில் தேவை அதிகரித்துள்ளது என்று மற்றொரு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. 2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டு சராசரி மனை விற்பனையில் பாதி அளவுக்கு ஜூன் மாதத்திலேயே நடந்துவிட்டது. ஏனெனில் மாநிலங்கள் திறந்து கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கியுள்ளன என்கிறது அந்த ஆய்வு.

உற்பத்தியில் டாப் நகரங்கள்
ஹைதராபாத், பெங்களூர் மற்றும் மும்பை நகரங்களில் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5 லட்சம் யூனிட்டுகள் வீடுகள் விற்பனைச் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 45 சதவிகிதம் ஏற்கனவே 2021 முதல் பாதியின் முடிவில் நிறைவடைந்துள்ளது. மற்ற கட்டுமான பணிகள் இப்போது வேகம் பிடித்துள்ளன.

மகிழ்ச்சி செய்தி
"ஜூன் மாதத்தில் மனை விற்பனையின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தை விட அதிகமாக உள்ளது. லாக்டவுன் தளர்த்தப்பட்ட பின்னர் ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 55 சதவீத விற்பனை நடந்தது. வீடுகளை வாங்கியவர்களில் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் பேர் ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ளவர்கள். அதை விட பெரிய வீடுகளை வாங்க அவர்கள் விரும்பினர் " என்று ஹவுசிங்.காம், மக்கான்.காம் மற்றும் ப்ராப்டிகர்.காம் குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி மணி ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications