“வீட்டையே லாட்ஜாக மாற்றிவிட்டார்.. கொலை மிரட்டல் விடுக்கிறார்”.. கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார்!
சென்னை: வீட்டிற்கான வாடகை பாக்கியை கொடுக்காமல், லாட்ஜ் போல மாற்றிவிட்டதாகவும், வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், நடிகர் கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்ற கஞ்சா கருப்பு, சிவகங்கையை பூர்வீகமாக கொண்டவர். தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். கஞ்சா கருப்பு சென்னையில் மதுரவாயில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். 2021 முதல் அங்கு வசித்து வருகிறார். கஞ்சா கருப்பு சென்னையில் படப்பிடிப்பு இருக்கும் போது இந்த வீட்டில் தான் தங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கஞ்சா கருப்பு சென்னையில் இல்லாத சமயத்தில் வீட்டின் உரிமையாளர் பூட்டை உடைத்து வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சித்ததாக கஞ்சா கருப்பு மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் வீட்டில் தனது உடைமைகள் இருக்கும்போதே தனக்கு தெரியாமல் அத்துமீறி வீட்டின் பூட்டை உரிமையாளர் உடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் கஞ்சா கருப்பு மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர், கஞ்சா கருப்பு ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும், வீட்டை வேறு ஒரு நபருக்கு உள் வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளர் அளித்துள்ள புகாரில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல், கஞ்சா கருப்பு என்னுடைய வீட்டில் வசித்து வருகிறார். சென்னையில் ஷூட்டிங் நடக்கும் போது, இந்த வீட்டில் வந்து தங்குவேன் என சொல்லி தான் வாடகைக்கு வந்தார். பல மாதங்களாக அவர் வீட்டுக்கு வாடகை கொடுப்பதை நிறுத்தி விட்டார். இதுவரை 3 லட்சம் வாடகை பணம் அவர் கொடுக்க வேண்டி உள்ளது.
மேலும், என்னுடைய வீட்டை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் வீட்டில் நடக்கின்றன. என்னுடைய வீட்டை ஒரு லாட்ஜ் போல கஞ்சா கருப்பு மாற்றி விட்டார். இதைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார் என வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து மதுரவாயல் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ள இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications