விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் எப்படி அந்த தவறுக்கு பொறுப்பேற்க முடியும்? எல்.முருகன் காட்டம்!
சென்னை: சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடிக்கு பொறுப்பு ஏற்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் எல்.முருகன், வெள்ள பாதிப்பு விவகாரத்தை திசைதிருப்ப திமுகவினர் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர் என விமர்சித்துள்ளார்.
சென்னை தொலைக்காட்சி நிலையமான 'டிடி தமிழ்' சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் உள்பட அனைவரும், எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது சில வார்த்தைகளை பாடாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வார்த்தைகளை பாடாமல் அடுத்த வரியான 'தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே' என்று பாடினர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட பலரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில் அளித்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்ப, இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதை திசை திருப்பவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் விவகாரத்தில் கருத்து தெரிவிக்கிறார்.
இந்தியா கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு முறையும் இப்படிதான் திசை திருப்ப திட்டமிடுகின்றனர். தமிழை ஐ.நா.சபை வரை கொண்டு சென்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு. ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏதாவது கிடைக்குமா என்று தேடித்தேடி ஒரு சிறிய தவறை பெரிதுபடுத்தினர். தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய சிறுவர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டனர்.
சென்னையில் ஒரு நாள் மழைக்கு சரியான திட்டமிடல் இல்லாததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதை திசை திருப்பவே இவ்வாறு செய்கின்றனர். கூவம் நதி உள்ளிட்ட நதிகளை சீரமைப்பு செய்யாமல் வெள்ளத்தை தடுக்க முடியாது என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இப்பொழுது எங்கே பிரச்சனை என்றால் தமிழக முதல்வர் கவனத்தை திசைத் திருப்புவதற்காக இப்படி கூறி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த தவறு, அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டார்கள். ஆனால் இதில் ஆளுநரை தொடர்பு படுத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. எந்த விதத்திலும் தர்மமும் கிடையாது.
டி.டி தமிழில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் எப்படி அந்த தவறுக்கு பொறுப்பு ஏற்க முடியும்? நாங்கள் இந்திக்கு ஆதரவாளர்களும் இல்லை, எதிரானவர்களும் இல்லை. தி.மு.க.வினர் பிழைப்புக்காக நடத்தும் இந்தி பயிலும் பள்ளி கல்லூரிகளை மூட முடியுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக மத்திய அமைச்சர் எல்.முருகன், டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி கொண்டாட்டங்கள் நடப்பதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications