உலகை அலறவிட்ட மந்தநிலை.. இந்தியா தப்பிக்க இந்த மேட்டர்தான் காரணம்.. பட்ஜெட் குறித்து வல்லுநர் கௌரி
சென்னை: மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் கௌரி ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது.

பொருளாதார வல்லுநர்: இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர் கௌரி ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், "இது இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய முக்கிய அறிவிப்புகளை இதில் வெளியிட முடியாது. சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். refomr, perform, transform என்ற மூன்று மந்திரத்தை வைத்துச் செயல்படுத்துவதாகத் தெரிவித்து பாஜக செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.
நாம் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். கோவிட் காலத்தில் பணவீக்கம் அதிகமாக இருந்த நிலையில், இப்போது அது குறைந்துள்ளது. இதற்கு நீண்ட கால நோக்கில் தீர்வு தேவை. அதற்கு சப்ளை அண்ட் டிமெண்ட் சரியாக இருக்க வேண்டும். அதற்கான தீர்வை முன்வைத்துள்ளனர். அதேபோல ஏழை மக்களை உதவவும் பல நடவடிக்கைகள் உள்ளது. 25 கோடி பேரை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
கடன்: வெளி சந்தையில் இருந்து 14.3 லட்சம் கோடி கடன் வாங்கி வந்துள்ளோம். இப்போது அது 11.5 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. வெளிச் சந்தையில் கடன் வாங்குவது குறைந்தாலே உள்ளூரில் வளர்ச்சி நன்றாக இருக்கும். இது மிக முக்கியமான நடவடிக்கை. மத்திய அரசின் திட்டங்களால் வேலைக்குச் செல்லும் பெண்கள் எண்ணிக்கை கடந்த 2017-18உடன் ஒப்பிடும் போது இப்போது அதிகரித்துள்ளது. அதேபோல இளைஞர்களை ஊக்குவிக்கும் பல திட்டங்களைச் சொல்லியுள்ளார்கள்.
அரசு பல விஷயங்களைச் செய்துள்ளார்கள் என்ற போதிலும் அது நிதிச் சுமையை ஏற்படுத்தாத வகையில் பார்த்துக் கொண்டனர். உதாரணமாக இப்போது தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது கூட இன்சூரன்ஸ் நிறுவனங்களை அழைத்து பணம் கொடுக்க வைத்தார்கள். இது அரசு மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஆனால், அரசின் நிதிக்குப் பாதிப்பில்லை.
வருவாய் அதிகரிப்பு: ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது வரி ஏய்ப்பு செய்யவே முடியாத சூழல் இருக்கிறது. தொழில்நுட்பத்தை வைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசுத் திட்டங்களில் லீக்கேஜ் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம் அந்த தொகையை மற்ற வறுமை ஒழிப்பு திட்டங்களுக்குப் பயன்படுத்த முடிகிறது.
இந்த ஒரு விஷயம்: கொரோனா காலத்தில் உலகெங்கும் மந்த நிலை ஏற்பட்டது. அப்போது பல நாடுகள் நேரடியாக மக்களிடம் பணத்தைக் கொடுத்தனர். நீண்ட கால நோக்கில் இதைப் பார்க்கும் போது அவர்கள் கடனில் இருந்து மீளவில்லை, ஜிடிபி ஏறவில்லை. பணவீக்கமும் குறையவில்லை. ஆனால், இந்தியாவில் பணத்தைத் தராமல் நேரடியாகப் பொருட்களைக் கொடுத்தனர்.
இதன் மூலம் மக்கள் கடன் வாங்கத் தேவையில்லாத சூழலை உருவாக்கினர். அடுத்துச் சிறு குறு தொழில் செய்வோர், சாலைகளில் கடை வைத்திருப்போருக்கு கடன் கொடுத்தனர். சில பிரச்சினைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்க மத்திய அரசின் பாலிசி நடவடிக்கையே காரணம்" என்றார்.












Click it and Unblock the Notifications