வசமாய் சிக்கிய 2 பேர்.. திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவனை தட்டித்தூக்கிய தனிப்படை.. எப்படி?
திருவண்ணாமலையில் கடந்த 12ம் தேதி 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ரூ.75 லட்சம் வரை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையில் வடமாநில கும்பல் ஈடுபட்டதை போலீசார் கண்டறியந்த நிலையில் ஹரியானாவில் இன்று 2 பேரை தட்டித்தூக்கினர். இவர்கள் 2 பேரையும் சென்னை அழைத்து வந்த தனிப்படை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தீவிர விசாரணை நடத்த உள்ளனர். இந்நிலையில் தான் இருவரும் எப்படி சிக்கினர்? என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் நுழைந்த கொள்ளை கும்பல் பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது. பக்கா பிளானோடு களமிறங்கிய வடமாநில கும்பல் இந்த கொள்ளையை அரங்கேற்றியது.
அதன்படி திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெரு எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதி எஸ்பிஐ ஏடிஎம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

ரூ.75 லட்சம் கொள்ளை
கடந்த 12ம் தேதி மட்டும் திருவண்ணாமலையில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் மொத்தம் சுமார் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு கொள்ளை கும்பல் தப்பி சென்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபற்றி உடனடியாக போலீசார் விசாரணையை துவங்கினர். வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மேற்பார்வையில் வேலூர் டிஐஜி முத்துசாமி தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

நோட்டமிட்டு கொள்ளை
இந்த தனிப்படை போலீசார் தனித்தனியாக பிரிந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடினர். போலீசாருக்கு கிடைத்த தடயங்கள் அடிப்படையில் ஹரியானா, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். இந்நிலையில் தான் ஹரியானாவை சேர்ந்த கொள்ளை கும்பல் தான் ஏடிஎம் மையங்களில் நுழைந்து கொள்ளையடித்தை போலீசார் உறுதி செய்தனர். மேலும் இந்த கும்பல் கர்நாடகா மாநிலம் கோலாரில் உள்ள விடுதியில் தங்கி திருவண்ணாமலைக்கு வந்து நோட்டமிட்டு கொள்ளையடித்தை போலீசார் உறுதி செய்தனர்.

2 பேர் அதிரடி கைது
இந்நிலையில் தான் தனிப்படை போலீசார் ஹரியானாவில் பதுங்கிய 2 கொள்ளையர்களை அதிரடியாக இன்று கைது செய்தனர். ஹரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் (வயது 35), புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆசாத் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் முகமது ஆரிப் தான் கொள்ளை கும்பல் தலைவன் என கூறப்படுகிறது.

சிக்கியது எப்படி?
அதாவது தமிழ்நாடு போலீசார் கர்நாடகா சென்ற நிலையில் போலீசாரை மோப்பம் பிடித்த கொள்ளை கும்பல் பிற இடங்களுக்கு சென்றுள்ளது. அப்போது தான் முக்கிய குற்றவாளிகளாக உள்ள முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோர் பெங்களூரில் இருந்து விமானத்தில் ஹரியானா சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த போலீசார் தீரன் அதிகாரம் ஒன்று படப்பாணியில் ஹரியானா சென்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் தட்டித்தூக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது கைது செய்யப்பட்டுள்ள முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோரிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அடுத்த மூவ் என்ன?
கைதான 2 பேரையும் தனிப்படை போலீசார் ஹரியானாவில் இருந்து டெல்லி அழைத்து சென்றனர். அதன்பிறகு டெல்லியில் இருந்து விமானத்தில் இரவில் சென்னை அழைத்து வந்தனர். சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து செல்லும் தனிப்படை போலீசார் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையின்போது கொள்ளை கும்பல் பற்றிய பிற முக்கிய விஷயங்கள் தெரியவருவதோடு, அவர்களையும் தனிப்படை போலீசார் விரைவில் கைது செய்ய வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications