Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலைவனம்.. காடு.. கைரேகை.. பவாரியாக்களை தமிழ்நாடு போலீஸ் பிடித்தது எப்படி? 20 வருட தாமதம் ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு மீண்டும் கவனம் பெற்றுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் நிலையில்.. இந்த கொள்ளைக்கும்பல் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. நீண்ட காலம் விசாரிக்கப்பட்டு.. நீண்ட காலம் கொள்ளையர்கள் தேடப்பட்டு.. தற்போது 20 வருடங்களுக்கு பின் இந்த கொலை, கொள்ளை வழக்கில் நீதி கிடைக்க உள்ளது.

தமிழ்நாட்டில், இந்த கொலையில் என்ன நடந்தது? யார் இந்த பவாரியாக்கள்? இவர்கள் செய்த கொடூரங்கள் என்னென்ன? பவாரியாக்களை பிடிக்க முடியாமல் போலீசார் நீண்ட காலம் விசாரணை நடத்தியது ஏன்?

யார் இந்த பவாரியாக்கள்?

1990களின் நடுப்பகுதி முதல் 2000களின் நடுப்பகுதி வரை இந்தியாவின் பல வீடுகள் பவாரியா கும்பலுக்கு அஞ்சிதான் வாழ்ந்து வந்தன. இந்த கும்பல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கொள்ளை மற்றும் கொலைகளை அரங்கேற்றி மக்களை அச்சுறுத்தின. "பவாரியா கொள்ளைகள்" என அறியப்பட்ட இச்சம்பவங்கள் தமிழ்நாட்டையே உலுக்கியது. லாரி ஓட்டுநர்கள் போல வேடமிட்டு மாநிலம் விட்டு மாநிலம் சென்று குற்றச்செயல்களில் ஈடுபட்ட நெடுஞ்சாலைக் கொள்ளையர் கும்பல் இதை நிகழ்த்தியது.

How did Tamil Nadu police 15 long years put a full stop to Bawaria Robberies The story behind real Dheeran

தீரன் படத்தில் காட்டப்பட்ட உண்மை பின்னணி

இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் தீரன் அதிகாரம் ஒன்று. தமிழ்நாட்டில் பவாரியா கொள்ளை கும்பல் செய்த திருட்டு மற்றும் கொலை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.

உண்மை சம்பவங்களை மையங்களாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் கார்த்தி, ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம், டெல்லி என்று பல மாநிலங்களுக்கு சென்று பவாரியா கும்பலை பிடிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கும். பவாரியா கும்பலின் தலைவன் ஓமாவை கடைசியில் கைது செய்வதோடு படம் முடிந்துவிடும். படத்தில் இந்த கும்பல் மிக கொடூரமாக காட்டப்பட்டு இருக்கும். ஆனால் படத்தில் காட்டப்பட்டதை விட நிஜத்தில் இந்த குடும்பம் மிக கொடூரமானது, கொடுமையானது.

எப்படி திருடுவார்கள்?

இந்தக் கும்பல் மிகுந்த திட்டமிடலுடன் செயல்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு லாரிகளில் பயணித்து, சாதாரண போக்குவரத்து தொழிலாளர்களைப் போல பொருட்களை விநியோகித்தனர். பகல் நேரத்தில் ஜமுக்காளம் போன்ற பொருட்களை விற்க வருவது போல வேவு பார்த்து.. பின்னர், இருட்டியதும் திருடுவார்கள். நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குள்தான் இவர்கள் நுழைந்து திருடுவார்கள். நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருந்த, குறிப்பாக வசதி படைத்த வீடுகளை இவர்கள் குறிவைத்தனர்.

How did Tamil Nadu police 15 long years put a full stop to Bawaria Robberies The story behind real Dheeran

முக்கியமாக அப்போது நெடுஞ்சாலை பணிகள் நிறைய நடந்ததால் அந்த பணியாளர்கள் போல ஊருக்குள் நடமாடி.. இரவு நேரங்களில் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்து இருந்தனர்.

கொள்ளையடிக்கும் இடம் - நேரத்தை எப்படி தேர்வு செய்வார்கள்?

இவர்கள் தனியாக இருக்கும் வீடுகளைத்தான் தேர்வு செய்வார்கள். அமாவாசை இரவுகளில்தான் பெரும்பாலான தாக்குதல்கள் நடந்தன. அப்போது சுற்றுப்புறம் மிகவும் இருண்டு இருக்கும். பவாரியா கும்பலில் ஒரு உறுப்பினர் வெளியே துப்பாக்கியுடன் பாதுகாப்பிற்கு காத்திருக்க, மற்றவர்கள் இரும்பு கம்பிகள், கோடாரிகள் அல்லது கற்களைப் பயன்படுத்தி கதவுகளை உடைத்து உள்ளே நுழைவார்கள். விரைவாக உள்ளே சென்று, குடும்பத்தினரை அடித்து கொன்று அல்லது மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பார்கள். மக்கள் பலர் இதில் கொடூரமாக தாக்கப்பட்டனர். பல சம்பவங்களில் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; சத்தம் போடாமல் இருக்க செல்லப்பிராணிகள் கூட கொல்லப்பட்டன.

How did Tamil Nadu police 15 long years put a full stop to Bawaria Robberies The story behind real Dheeran

பாதிக்கப்பட்டவர்களால் புரிந்துகொள்ள முடியாதபடி, உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தாமல் குற்றவாளிகள் தங்கள் பேச்சில் ரகசியம் காத்தனர். சில சமயங்களில் இந்தி கூட பயன்படுத்தாமல் சில பழங்குடி சொற்களை இந்த பவாரியா கும்பல் பயன்டுத்தியது.

போலீசாரை திரும்பி பார்க்க வைத்த தாக்குதல்

பவாரியா கும்பலின் முதல் பெரிய தாக்குதல் 1995-ல் வாலாஜாபேட்டையில் நடந்தது. அங்கு ஒருவரைக் கொன்று பணம் கொள்ளையடிக்கப்பட்டது. 10 ஆண்டுகளில் தாக்குதல்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்தது. மேற்கு தமிழ்நாடு, சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைப் பகுதிகள் இவர்களின் முக்கிய இலக்குகளாக மாறின.

How did Tamil Nadu police 15 long years put a full stop to Bawaria Robberies The story behind real Dheeran

2002-ல் சேலத்தில் நடந்த ஒரு கொள்ளையில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த கும்பல் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து, உரிமம் பெற்ற துப்பாக்கிகளையும் திருடிச்சென்றது. 2000ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 2006 வரை தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். முக்கியமாக சேலம் மாவட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சேலம் தாளமுத்து நாராஜன் வீட்டில் கடந்த 2002ல் கொள்ளையடித்தனர். இதில் தாளமுத்து நடராஜன் சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டார். துப்பாக்கியால் சுட்டு, வீட்டில் இருந்தவர்களை கொடுமையாக தாக்கி இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

கொல்லப்பட்ட எம்எல்ஏ?

முன்னாள் அமைச்சர் எம்எல்ஏ சுதர்சனத்தின் வீட்டிலும் 2005ல் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போதும் வீட்டில் இருந்தவர்கள் கொடுமையாக தாக்கப்பட்டனர். சுதர்சனத்தின் வீடு பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் இருந்தது. இங்கு கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி, அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை 2.45 மணிக்கு 6 பேர் கொண்ட பவாரியா கும்பல் புகுந்தனர்.

How did Tamil Nadu police 15 long years put a full stop to Bawaria Robberies The story behind real Dheeran

வீட்டின் கதவை உடைத்து சுதர்சனத்தின் இளைய மகன் சதீஷைத் தாக்கி கட்டி போட்டனர். இந்த சப்தம் கேட்டுவிட்டு, மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சுதர்சனம் கீழே இறங்கி வந்தார். அவர் இந்த கொள்ளையர்களை பார்த்து சப்தம் போட்டார். உடனே அந்த மர்மகும்பல் சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து அங்கிருந்து 63 சவரன் நகை, பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

படாதபாடு பட்ட போலீஸ்

2005-ல் சட்டமன்ற உறுப்பினர் கொலை செய்யப்பட்ட பிறகு, தமிழ்நாட்டு காவல்துறை இந்தக் கும்பலைக் கண்டுபிடிக்க ஒரு பெரிய சிறப்பு அணியை அமைத்தது. இந்த அணியில் மூத்த அதிகாரிகள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.

How did Tamil Nadu police 15 long years put a full stop to Bawaria Robberies The story behind real Dheeran

பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் வகை மற்றும் கும்பலின் தனித்துவமான பேச்சு போன்ற தடயங்கள், வட இந்திய மாநிலங்களில் இருந்து இந்தக் கும்பல் வந்திருப்பதை காவல்துறையினர் கண்டறிய உதவின. அதிகாரிகள் நாடு முழுவதும் பயணித்து, கைரேகைகளைப் பொருத்திப் பார்த்து, பிற மாநில காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். நாடு முழுவதும் உணவு இல்லாமல்.. தங்க போதிய வசதி இல்லாமல் ஊர் ஊராக அலைந்து சென்று இவர்களை தேடினர்.

ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படை மிகத் தீவிரமாக தேடி ஒரு மாதத்திலேயே கொள்ளையர்களை கண்டுபிடித்தது. இதையடுத்து ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். பல முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்

ஆனாலும் கும்பல் தலைவன் தலைமறைவாகி இருந்தான். அதன்பின் நீண்ட தேடுதலுக்கு பின் கும்பல் தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் அதே ஆண்டு பிற்பகுதியில் பிடிபட்டனர். சில உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர். அதாவது சிலர் 10 ஆண்டுகள் கூட தலைமறைவாகி இருந்தனர். சிலர் வேறு வேறு வழக்குகளில் சிறையிலேயே மரணம் அடைந்தனர். மேலும் சிலர் பிற்கால நடவடிக்கைகளின் போது என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர்.

வழங்கப்படும் தீர்ப்பு

ஒரு சிறப்பு நீதிமன்றம் முதலில் சில முக்கிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு நீண்ட கால சிறைத்தண்டனையும் விதித்தது. காலப்போக்கில், உயர் நீதிமன்றங்கள் சான்றுகளை மறுபரிசீலனை செய்து சில தண்டனைகளை மாற்றியமைத்தன.

How did Tamil Nadu police 15 long years put a full stop to Bawaria Robberies The story behind real Dheeran

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி எவ்வாறு திட்டமிட்டு கொடூரமான குற்றங்களை நிகழ்த்த முடியும் என்பதை பவாரியா கொள்ளைகள் வெளிப்படுத்தின. இந்த வழக்கு, மாநிலங்களுக்கு இடையே காவல்துறையின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், நெடுஞ்சாலை பாதுகாப்பை வலுப்படுத்தவும் தூண்டியது. இது தமிழ்நாட்டின் மிகவும் ஆய்வு செய்யப்பட்ட குற்ற விசாரணைகளில் ஒன்றாக மாறி, மக்கள் கலாச்சாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட நிலையில்தான் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு மீண்டும் கவனம் பெற்றுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் நிலையில்.. இந்த கொள்ளைக்கும்பல் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+