நீதிபதியின் மகள்.. லாட்ஜில் ரூம், சாப்பாடு.. பில் கட்டிய சென்னை போலீசுக்கு நம்ப முடியாத ட்விஸ்ட்
சென்னை: சென்னை செம்பியம் போலீஸ் ஸ்டேசஷனுக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி பெண் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீதிபதி ஒருவரின் பெயரைச் சொல்லி, "நான் நீதிபதியின் மகள். எனக்கு பிரபல ஓட்டல்களில் இருந்து சாப்பாடு ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறியுள்ளார். அத்துடன் பெரம்பூரில் உள்ள ஓட்டலில் தங்கியிருக்கிறார். எல்லாவற்றையும் போலீஸ் தலையிலேயே கட்டியிருக்கிறார். விசாரித்தால் அந்த பெண், சென்னை எஸ்பிளனேடு போலீஸ் ஸ்டேசனில் காவலர் என்பதும் தெரியவந்துள்ளது. இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை செம்பியம் போலீஸ் ஸ்டேஷன் கடந்த சில நாட்களாக நூதனமான பிரச்சனையை சந்தித்தது. பெண் ஒருவர் அடிக்கடி அழைத்து தொலைபேசியில் பேசியிருக்கிறார்.. அப்படி ஒவ்வொரு முறை பேசும் போதும், நீதிபதி ஒருவரின் பெயரைச் சொல்லி, நான் நீதிபதியின் மகள். எனக்கு பிரபல ஓட்டல்களில் இருந்து சாப்பாடு ஏற்பாடு செய்யுங்கள் என கேட்டு வாங்கியிருக்கிறாராம். ஆனால் அதற்கான பணத்தை போலீசாரை செலுத்தும்படி கூறியதுதான் ஹைலைட்.

நீதிபதியின் மகள்
அடுத்ததாக சென்னை பெரம்பூரில் உள்ள பிரபல ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிவிட்டு, அதற்கான வாடகையை செம்பியம் போலீசாரை செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார் அந்த பெண். மேலும் போலீசார் அறை வாடகையை தரவில்லை என்றால் தனது தந்தையான நீதிபதியிடம் சொல்லிவிடுவதாக மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன போலீசாரும் அந்த பெண் கேட்டதை வாங்கி கொடுத்தும், அறைக்கான வாடகையை செலுத்தியும் வந்திருக்கிறார்கள்.
பெண் காவலர்
ஆனால் அடிக்கடி அந்த பெண், நீதிபதியின் பெயரைச்சொல்லி மிரட்டியதால், ஒரு கட்டத்தில் செம்பியம் காவல் நிலைய போலீசாருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அவரது செல்போன் எண்ணை வைத்து இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, அந்த பெண்ணை பிடித்து விசாரித்துள்ளார்கள். அப்போது அவரிடம் பெண் போலீசுக்கான அடையாள அட்டை இருந்தது.
திண்டுக்கல் காவலர் ரேகா
விசாரணையில் அவரது பெயர் ரேகா (வயது 40) என்பதும், பெண் போலீஸ் என்பதும் தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேகா, சென்னை பெரம்பூர் அகரத்தில் மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் பொன்ராம், உடல்நிலை சரியில்லாமல் சொந்த ஊரில் இருக்கிறாராம்.
யார் இந்த ரேகா
சென்னை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை செய்து வந்தார். ஆனால் கடந்த 6 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் விடுப்பில் இருந்து வந்தாராம். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ரேகா, அடிக்கடி செம்பியம் போலீசாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீதிபதியின் மகள் என மிரட்டியதும் தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் போலீஸ் ரேகாவை கைது செய்தனர். மேலும் அவர் இதுபோல் நீதிபதியின் பெயரை சொல்லி பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு போன் செய்து போலீசாரை ஏமாற்றியதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து காவலர் ரேகாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications