ஸ்டாலின் டாஸ்க்.. சொன்னபடி செய்து முடித்த செந்தில் பாலாஜி.. வைத்தி உள்ளே வந்தது எப்படி? பின்னணி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரான ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம் தனது மகன் பிரபு உடன் அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.
அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாகச் செயல்பட்ட வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு நீக்கப்பட்டனர். அதன் பின்னர் ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவர்களாக இருவரும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏகுன்னம் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் இன்று சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளனர்.
வைத்திலிங்கம் பின்னணி
தஞ்சாவூர் ஒரத்தநாடு தொகுதியின் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினரான ஆர். வைத்திலிங்கம், அ.தி.மு.க.வில் அதிருப்தி தலைவர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால் நீக்கப்பட்டிருந்தார். நேற்று தி.மு.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் அக்கட்சியில் இணைந்தார்.
ஊடகத்தினரிடம் பேசிய டெல்டா பகுதியின் முக்கிய தலைவரான வைத்திலிங்கம், அண்ணாவால் தொடங்கப்பட்ட 'தாய் கட்சிக்கு' திரும்புவதாகக் கூறினார். தேர்தல் நெருங்குவதால், விரைந்த அரசியல் முடிவு தேவை என்றார். தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடும் நிகழ்வு ஜனவரி 27 அன்று தஞ்சாவூரில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
தி.மு.க.வில் சேர்வதற்கு முன் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என வைத்திலிங்கம் குறிப்பிட்டார். எனினும், தனது மகனுக்கு ஒரத்தநாடு தொகுதியைக் கேட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அ.தி.மு.க. சுதந்திரமற்று, அதன் தலைவர்கள் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகின்றனர் என அவர் குற்றம்சாட்டினார். பா.ஜ.க. ஆதிக்கம் குறித்து "உங்கள் மனசாட்சியைத் தொட்டு நீங்களே பதில் சொல்லுங்கள்" என்றார்.
கட்சி மாறும் முன், வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை சபாநாயகர் மு. அப்பாவுவிடம் ராஜினாமா செய்தார். 2016 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் 'புல்லட்' ராமச்சந்திரனிடம் தோற்றபோதும், ஜெ. ஜெயலலிதா இவரை மாநிலங்களவைக்கு அனுப்பினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாட்டில் மீண்டும் வென்றார். அவர் 2001-2006, 2011-2016 காலங்களில் ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
பி. மனோஜ் பாண்டியனைத் தொடர்ந்து, சமீப நாட்களில் தி.மு.க.வில் இணைந்த இரண்டாவது மூத்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆவார். இருவரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள். அவரது இணைப்பு நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, கோவி செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செந்தில் பாலாஜி கேம்
இவர் திமுக வருவதற்கு பின் செந்தில் பாலாஜியை காரணம் என்கிறார்கள். அவர் பேசியே திமுக பக்கம் இவரை வர வைத்து உள்ளார். முக்கியமாக அவரது மகனுக்கு ஒரத்தநாடு தொகுதியைக் கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கான பேச்சுவார்த்தையில் செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குறுதிகள்.. இவர் கட்சி மாற காரணம் என்கிறார்கள். அவரிடம் ஸ்டாலின் இந்த டாஸ்கை கொடுத்ததாகவும்.. அதை செந்தில் பாலாஜி கச்சிதமாக முடித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications