Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய கடற்படை கப்பல்களுக்கு பெயர் வைப்பது எப்படி தெரியுமா? ஐஎன்எஸ் நீலகிரி பெயரின் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்நாட்டின் கடற்படையில் நேற்று 3 அதிநவீன போர்க்கப்பல்கள் சேர்க்கப்பட்டன. இந்த போர்க்கப்பல்களுக்கு ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் வாக்சீர் என்று பெயரிடப்பட்டன. இதில் ஐஎன்எஸ் நீலகிரி என்ற பெயர் நீலகிரி மலை பிரதேசத்தின் நினைவாக போர்க்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இது நம்மில் பலருக்கும் தெரிந்திருந்தாலும் கூட இந்திய கடற்படை கப்பல்களுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது? அதில் கடைப்பிடிக்கப்படும் அம்சங்கள் என்ன? என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதுபற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம் நாட்டை பாதுகாக்கும் பணியில் ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்டவை முக்கியமானவை. இந்த முப்படைகளையும் ஆண்டுதோறும் மேம்படுத்தி வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எதிரிகளை நம்மால் சமாளிக்க முடியும்.

warships navy

அந்த வகையில் நம் நாட்டின் கடற்படைக்கு வலுசேர்க்கும் வகையில் நேற்று 3 விதமான போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் பிரதமர் மோடி ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்சீர் என்று பெயர் வைக்கப்பட்ட 3 போர்க்கப்பல்களை இந்திய கடற்படையில் சேர்த்தார்.

இதில் ஐஎன்எஸ் நீலகிரி போர்க்கப்பலின் பின்னணியில் தமிழகம் உள்ளது. நம் மாநிலத்தில் உள்ள நீலகிரி மலைப்பிரதேசத்தின் நினைவாக இந்திய கடற்படை போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் நீலகிரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தான் மற்ற 2 கப்பல்களுக்கும் பிற பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இப்போது நம்மில் பலருக்கும் சந்தேகம் எழலாம்.

இந்தியாவில் பல்வேறு நகரங்கள் இருக்கும்போது இந்திய கடற்படை எப்படி குறிப்பிட்ட நகரங்களின் பெயரை மட்டும் தேர்வு செய்து சூட்டுகிறது? இன்னும் சொல்லப்போனால் நீலகிரியில் கடல் என்பதே இல்லை. அப்படியெனில் கடற்படை கப்பலுக்கு நீலகிரி பெயர் வைக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுலாம். இதற்கு விடையை அறிய தொடர்ந்து படியுங்கள்.

அதாவது நம் நாட்டில் இந்திய கடற்படையின் கப்பல்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தனி பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த பெயர்களை தேர்வு செய்வதற்கு என்று தனி கமிட்டி உள்ளது. அதாவது மத்திய பாதுகாப்பு துறையில் உள்ள இன்டர்னல் பெயரிடும் கமிட்டி (Internal Nomenclature Committee) தான் ஒவ்வொரு கப்பல்களுக்கு பெயர்களை தேர்வு செய்யும்.

இந்த கமிட்டிக்கு என்பது கடற்படை உதவி தலைவர் தலைமை வகிப்பார். கமிட்டியில் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் வரலாற்று பிரிவு மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொல்பொருள் துறையின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள். இந்த குழு தான் நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்களை தேர்வு செய்து கப்பல்களுக்கு சூட்டும்படி பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரைக்கு கடற்படை தலைவர் ஒப்புதல் வழங்குவார். அதன்பிறகு தான் பெயர்கள் சூட்டப்படும்.

இதுதவிர இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. அதாவது முக்கிய போர்க்கப்பல்களுக்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் என்பது தேவையாகும். அதன்படி பார்த்தால் பாதுகாப்பு துறையில் உள்ள பெயரிடும் கமிட்டி, இந்திய கப்பற்படை தலைவர், ஜனாதிபதி ஆகியோர் அனுமதியுடன் தான் கடற்படை கப்பல்களுக்கு பெயர் வைக்கப்படுகிறது.

இப்படி பெயர் வைக்கும்போது அனைத்து கப்பல்களின் முன்பும் இந்திய கடற்படையை குறிக்கும் வகையில் ஐஎன்எஸ் (INS or Indian Naval Ship) என்பது முன்னொட்டாக சேர்க்கப்படும். அதாவது கடற்படையில் பல்வேறு வகையான போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் Cruiser அல்லது Destroyer என அழைக்கப்படும் போர்க்கப்பல்களுக்கு குறிப்பிட்ட மாநில தலைநகரின் பெயர் அல்லது குறிப்பிட்ட ராஜா/போர்வீரன் வாழ்ந்த பகுதியின் பெயர்கள் சூட்டப்படும். அந்த வகையில் தான் இந்திய கடற்படையில் நேற்று சேர்க்கப்பட்ட Destroyer வகை போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் சூரத் என்று பெயர் வைக்கப்பட்டது.

அதேபோல் இன்னொரு போர்க்கப்பல் என்பது Frigates என்று அழைப்பார்கள். இந்த போர்கப்பல்களுக்கு பொதுவாக ராணுவ ஆயுதங்கள், ஆறு அல்லது மலைகளின் பெயர்கள் சூட்டப்படும். நேற்று இந்திய கடற்படையில் புதிதாக இணைக்கப்பட்ட Frigates வகை போர்க்கப்பலுக்கு தான் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஐஎன்எஸ் நீலகிரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதேபோல் நீர்மூழ்கி கப்பல்கள் பொதுவாக கடலுக்கு அடியில் இருக்கும். கடலுக்கு அடியில் இருந்து எதிரிகளை தாக்கும் பணியை இந்த நீர்மூழ்கி கப்பல்கள் மேற்கொள்ளும். இதனால் வேட்டையாடும் மீன்களின் பெயர்கள் இந்திய கடற்படை கப்பல்களுக்கு சூட்டப்படும். இதற்கு முன்பு ஐஎன்எஸ் சிந்துகோஷ் என்று பெயர் வைக்கப்பட்டது. அதன்பிறகு நேற்று கடற்படையில் சேர்க்கப்பட்ட அதி நவீன நீர்மூழ்கி கப்பலுக்கு ஐஎன்எஸ் வாக்சீர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் வாக்சீர் என்பது ஒரு மீன் இனமாகும். மேலும் இந்திய கடற்படை கப்பல்களில் ஒருமுறை பெயர் வைத்தால் அதன்பிறகு மீண்டும் அந்த பெயர் பயன்படுத்தப்படமாட்டாது என்பது விதியாகும். இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இப்படி தான் நம் நாட்டில் ஒவ்வொரு போர்க்கப்பலுக்கும் பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது. அதோடு நேற்று இந்திய கடற்படையில் சேர்க்கப்ப்டட ஐஎன்எஸ் சூரத் போர்கப்பல் என்பது பி15பி எனும் வழிக்காட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் ஒருபகுதியாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் 4வது மற்றும் இறுதி போர்க்கப்பல் இதுவாகும். இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வசதி கொண்ட கப்பல்களில் ஒன்றாக இருப்பது நம் நாட்டுக்கு பெருமையாகும். இந்த கப்பல் என்பது 75 சதவீதம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டதாகும்.

அதேபோல் ஐஎன்எஸ் நீலகிரி என்பது பி17ஏ ஸ்டெல்த் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கப்பல் இதுவாகும். இந்த கப்பல் நமது கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது அடுத்த தலைமுறைக்கான உள்நாட்டு போர் கப்பல்களில் முக்கியமானதாக இருக்கும்.

இதற்கு அடுத்தப்படியாக நாம் பார்ப்பது ஐஎன்எஸ் வாக்சீர் நீர்மூழ்கி போர்க்கப்பல். இது பி75 ஸ்கார்பீயன் திட்டத்தின் ஒருபகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த திட்டத்தில் 6 கப்பல்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 5 போர்கப்பல்கள் உருவாக்கப்பட்ட நிலையில் இது 6வது மற்றும் கடைசி கப்பலாகும். இது நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் என்பது நம் நாட்டின் கடற்படை மற்றும் பிரான்ஸ் கடற்படை இணைந்து தயாரித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+