இத்தனை நாட்கள் சிக்காத செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார்.. இப்போது கைதானது எப்படி.. ED செம பிளான்
சென்னை: செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கொச்சியில் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார். இவர் கரூர் - சேலம் புறவழிச் சாலையில் 2.49 ஏக்கர் பரப்பளவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அவருடைய மனைவி நிர்மலா பெயரில் இந்த வீடு கட்டப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கியதில் மோசடி செய்ததாகவும் இந்த வீட்டிற்கு தேவையான கட்டுமான பொருட்கள், கிரானைட் கற்கள் உள்ளிட்டவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த பிரம்மாண்டமான வீடு ரூ 300 கோடியில் கட்டப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேற்கண்ட புகாரின் பேரில் கடந்த மே மாதம் வருமான வரித் துறையினர் அசோக்குமாரின் வீட்டில் ரெய்டு நடத்தினர். அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ரெய்டு குறித்து அப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அந்த புதிய வீடு குறித்து விளக்கமளித்தார். அதாவது தனது தம்பியின் மனைவியின் தாய் அவருக்கு உள்ள காலி இடங்களை தங்கள் மகள்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்கும் வகையில் அந்த இடத்தை என் தம்பி மனைவிக்கு கொடுத்துள்ளார். அதில் அவர்கள் வீடு கட்டுகிறார்கள். அது என்னோட வீடு இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையின் கஸ்டடியில் இருக்கிறார். அவரிடம் இரு நாட்களாக ஒரு நாளைக்கு 50 கேள்வி என 100 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த நிலையில் இன்றைய தினம் கரூரில் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தி வருகிறது.
இங்கு ரெய்டு நடக்கும் போது பெண் அதிகாரி உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் அசோக்குமாரின் ஆடிட்டர் வீட்டிற்கு சென்று சோதனை நிகழ்த்தினர். அங்கு சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு ஆடிட்டர் வீட்டில் இல்லாததால் அவரை ஆஜராகுமாறு சம்மனை வீட்டில் ஒட்டியது. அது போல் அசோக்குமாரின் கரூர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவருடைய மனைவி நிர்மலா இல்லை.
அதனால் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் ஆஜராகுமாறு ஒட்டிவிட்டு வந்தனர். ஆனால் அவர் ஆஜராகாததால் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் வீட்டை அமலாக்கத் துறை முடக்கியது. வீடு முடக்கப்பட்டது தொடர்பான நோட்டீஸை மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கொடுத்தனர்.
இந்த நிலையில்தான் வீடு கட்டி வரும் நிலமானது ரூ 30 கோடி மதிப்புடையது என்றும் அதை வெறும் ரூ 10 லட்சத்திற்கு செந்தில் பாலாஜியின் மாமியார் வாங்கியதாகவும் தகவல் தெரிகிறது. இதையடுத்து இந்த நிலம் எப்படி இத்தனை குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை கேட்டறிய அசோக்குமாரின் மாமியார் லட்சுமிக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பினர்.
ஆனால் அவரும் ஆஜராகவில்லை. இந்த நிலையில்தான் அமலாக்கத் துறை கஸ்டடியில் இருந்த செந்தில் பாலாஜி, வீடு குறித்த விஷயங்கள் எல்லாமே என் தம்பிக்குத்தான் தெரியும் என கூறிவிட்டாராம். அண்ணனிடம் இருந்தே வாக்குமூலம் பெறப்பட்டு வந்த நிலையில் அவரை கைது செய்ய அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்ததாக தெரிகிறது.
கரூர் வீடு உள்ள நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கியது யார் என கேட்டதற்கு எனக்கு தெரியாது என செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அப்படியென்றால் அதை யார் வாங்கியது என கேட்ட போது கூட தம்பி பெயரை சொல்லாமல் நான் வாங்கவில்லை என்றுதான் செந்தில் பாலாஜி கூறினாராம். ஆனால் அதிகாரிகள் தங்களது டோனை மாற்றி கேட்ட போதுதான் தனது தம்பிக்குத்தான் தெரியும் என கூறியுள்ளாராம்.
இந்த வார்த்தை அண்ணன் வாயில் இருந்து வருவதற்கு முன்பே கடந்த 3 வாரங்களாக செந்தில் பாலாஜியின் தம்பியின் நடவடிக்கைகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனராம். அவருடைய செல்போன், அவரது உறவினர்களின் செல்போன் எண்கள் எல்லாம் ஒட்டு கேட்கப்பட்டனவாம். இதையடுத்துதான் கொச்சிக்கு அசோக்குமார் செல்வதை அறிந்த அதிகாரிகள் அங்குள்ள போலீஸாரை அலர்ட் செய்து அசோக்குமாரை கைது செய்தனராம்.
இதை முன் கூட்டியே செய்திருந்தால் சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி அசோக்குமார் வெளியே வர வாய்ப்பு இருக்கிறது என்பதால் செந்தில் பாலாஜியின் வாக்குமூலத்தை வைத்தே அசோக்குமாரை பிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications