சசிகலா நினைத்தாலும் 'அதிரடி' காட்ட முடியாது.. அமமுகதான் ஒரே ஆப்ஷன்.. அடித்து சொல்றாங்களே!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிதான் சசிகலாவுக்கு நிரந்தரம், என்று அரசியல் வட்டாரத்தில் உள்ள பலரும் தெரிவிக்கிறார்கள்.
அதிமுகவை அவர் கைப்பற்ற முடியாது.. அதிமுகவில் சசிகலா ஆதரவாளர்கள் அவர் பக்கம் சாய்ந்தால் கூட, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரை விட்டு கட்சி நழுவாது என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார்கள்.
இதன் பின்னணியில் சில அரசியல் சதுரங்க காய் நகர்த்தல்கள் இருக்கின்றன. எனவே தான் இவ்வளவு உறுதியாக அரசியல் பார்வையாளர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்கள்.
கொஞ்சம்கூட டயர்ட் ஆகாத சசிகலா.. தி.நகர் வீட்டிற்குள் நுழைந்ததுமே.. ஒரே நாளில் கெத்து டிராவல்!
சசிகலா திட்டம் என்ன?
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த மாதம் சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்தார். வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்னொரு பக்கம் அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இன்னொரு பக்கம், சசிகலா நினைத்தால் அதிமுகவிலிருந்து பலரைத் தன் பக்கம் இழுத்து கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முடியும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பலர் பேட்டிகளில் தெரிவித்தபடி இருந்தனர்.
தேர்தல் காலம்
இதுபற்றி சில அரசியல் விமர்சகர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய கருத்து வேறுவிதமாக இருக்கிறது. அந்த கருத்துக்களின் தொகுப்பு இதோ: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் சசிகலா தமிழகம் வந்துள்ளார். எனவே உடனடியாக இவரால் அதிமுகவில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. ஏனெனில் இது தேர்தல் காலம்.
முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால்
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் இணைந்துதான் அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்து இருந்தனர். தற்போது வெற்றி பெற்றுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் சுமார் 70 சதவீதம் பேர், சசிகலா தேர்ந்தெடுத்த வேட்பாளர்களாகத்தான் இருக்க முடியும். எனவே ஒருவேளை இன்னும் ஒரு வருடத்துக்கு முன்பாக சசிகலா ரிலீசாகி அரசியலில் கால் வைத்திருந்தால், அவருக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்கள் அவர் பக்கம் சென்றிருக்கக் கூடும். இதன் மூலம் கட்சிக்கும் ஆட்சிக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கக்கூடும். இப்போது நிலைமை அப்படி இல்லை.
வேட்பாளர் தேர்வு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் ஆணையத்திடம்தான் அனைத்து அதிகாரமும் இருக்கும். பிறகு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட விஷயங்களை கையில் எடுப்பது முடியாத காரியம். அது அநாவசியமும் கூட. இனிமேல் 2021ம் ஆண்டு என்ன நடக்கும் என்பது மட்டும்தான் அரசியல் கணக்கில் வரும். அப்படிப்பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர்தான் வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். அவர்கள் அனைவரும் இவர்களின் விசுவாசிகளாகதான் இருப்பார்கள். ஏற்கனவே இடம்பிடித்த சசிகலா விசுவாசிகளுக்கு பழையபடி சீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம்.
குறிவைத்து வெற்றி
மேற்கு மண்டலம் பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு தனித்த செல்வாக்கு இருக்கிறது. தங்களின் மண்ணின் மகன் என்று அந்த மக்கள் அவரைப் பார்க்கிறார்கள். ஓபிஎஸ், தேனி மற்றும் சில தென் மாவட்டங்ககளில் கிங். இது போன்ற சில மண்டலங்களை மொத்தமாக குறிவைத்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் போதும், ஆளுங்கட்சியாக வர முடிகிறதோ, இல்லையோ, எதிர்க்கட்சியாக வந்தால் கூட, கட்சி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்எல்ஏக்கள் அனைவருமே இவர்களின் ஆதரவாளர்களாக இருப்பார்கள்.
ஆட்சி, கட்சி இரண்டுமே
ஒருவேளை ஆளுங்கட்சியாக வந்து விட்டாலும் கூட, இவர்கள் ஆதரவாளர்கள்தான் எம்எல்ஏக்கள் என்பதால் ஆட்சிக்கும் பிரச்சினை கிடையாது, கட்சிக்கும் பிரச்சினை கிடையாது. சசிகலா குறித்த அச்சமே அதிமுகவுக்கு போய்விடும். எதிர்க்கட்சியாக வந்தால் கட்சி கட்டுப்பாட்டிலிருக்கும்.. ஆளும் கட்சியாக வந்தால் ஆட்சியும், கட்சியும் முழு கட்டுப்பாட்டில் இருக்கும். சசிகலா பற்றி எந்த அச்சமும் அதிமுகவுக்கு தேவையே இல்லை. திமுக, அமமுக ஆகிய கட்சிகள் எதிர்த்து நின்றாலும் அதிமுக இடைத் தேர்தல்களில் வென்று ஆட்சியை தக்க வைக்க முடிந்தது. எனவே, தேர்தல் வெற்றி கலை, அதிமுக தலைமைக்கு பெரிய விஷயம் இல்லை.
சசிகலா அதிரடி காட்ட முடியாது
எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை வலுப்படுத்துவது அல்லது அதிமுகவுடன் சுமுகமாக செல்வதாக நிலைப்பாடு எடுப்பது ஆகியவைதான் சசிகலாவுக்கு உகந்ததாக இருக்க முடியும். ஒரே வழியாக இருக்க முடியும். அதிரடி காட்டுவது என்பது நடக்காத காரியம். இவ்வாறு அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். எனவே 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல், அதிமுக கட்டுப்பாடு முழுவதையும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு வழங்கப்போகும் தேர்தலாக அமையப்போகிறது. வேட்பாளர் தேர்வுதான் அதற்கான விதையாக மாறப்போகிறது. எனவே, அதிமுகவில் சசிகலா தாக்கம் செலுத்த முடியாது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.