அன்னை இல்லம் வரலாறு! காமராஜர் முதல் வி.பி.சிங் வரை சிவாஜி வீட்டு டைனிங் ஹாலுக்கு வராதவர்களே இல்லை!
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அந்த வீட்டின் வரலாறு குறித்து தெரிந்து கொள்வோம். இந்த வீட்டிற்கு காமராஜர் முதல் எம்ஜிஆர் வரை வந்து உணவு உண்டு சென்றுள்ளனர்.
செவாலியே சிவாஜி கணேசனின் வீட்டை ரூ 3.74 கோடி கடனுக்காக ஜப்தி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து சிவாஜி தரப்பு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அன்னை இல்லம் வீட்டின் வரலாற்றை பார்க்கலாம். சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் என்பது திநகரில் உள்ளது. இந்த வீடு சினிமா துறையில் மிகவும் பிரபலம். எம்ஜிஆர் என்றால் ராமாபுரம் தோட்டம் என்பதை போல் சிவாஜி என்றால் அன்னை இல்லம் ஆகும்.
தெற்கு போக் சாலை
இந்த வீடு திநகரில் தெற்கு போக் (south boag road) சாலையில் உள்ளது. முதலில் இந்த வீட்டை ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவர் வைத்திருந்தார். அவர் அப்போது ஒடிஸா மாநில கவர்னராகவும் இருந்தார். அவர் அந்த பகுதியில் வசித்து வந்ததால் அந்த பகுதிக்கு போக் சாலை என பெயர் வந்தது.
1959-ல் வாங்கப்பட்ட அன்னை இல்லம்
பிறகு சிவாஜி கணேசன் அந்த வீட்டை 1959ஆம் ஆண்டு வாங்கி , அதற்கு அன்னை இல்லம் என பெயரிட்டார். அவர் செவாலியே விருது பெற்றதை அடுத்து சென்னை மாநகராட்சி தெற்கு போக் சாலையை நீக்கிவிட்டு செவாலியே சிவாஜி கணேசன் சாலை என பெயர் மாற்றியது.
உணவு உண்ணும் அறை
அந்த அன்னை இல்லத்தின் கிரவுன்ட் ஃப்ளோரில் பெரிய டைனிங் ஹால் உள்ளது. இங்குதான் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். சிவாஜி கணேசன் சூட்டிங் இல்லாத நேரத்தில் அன்னை இல்லத்திலேயே இருப்பார். இங்கு ஞாயிற்றுக்கிழமை என்றால் மதிய உணவு அமர்க்களப்படும்.
அசைவ விருந்து
மட்டன், சிக்கன், மீன், நண்டு, பிரியாணி, குழம்பு, சுக்கா, வறுவல் என விதவிதமாக உணவுகள் இருக்கும். சிவாஜி வீட்டில் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உள்ளிட்டோர் வந்து விருந்து சாப்பிட்டுள்ளனர்களாம். சிவாஜி படத்தின் சூட்டிங் இன்டோர் என்றால் அதில் நடிக்கும் ஆர்டிஸ்ட்களுக்கும் சேர்த்து கமலா அம்மாவே உணவு சமைத்து பெரிய டிபன் கேரியரில் அனுப்புவாராம். கமலா அம்மாளின் கைப்பக்குவத்தை ருசிக்காதவர்களே யாரும் இல்லை என்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் அசைவம், சைவம் சமைப்பதில் வல்லவராம்.
ஒரே கூட்டில் வசித்த பிரபு, ராம்குமார்
இந்த வீட்டில்தான் சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் கூட்டாக வசித்து வருகிறார்கள். இத்தகைய பெருமைமிக்க இந்த அன்னை இல்லத்தை ஏலத்தில் விட ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பேரனால் வந்த வினை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர்.
3 கோடி கடன்
பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
நீதிபதி நியமனம்
ஆனால் கடன் தொகையை திருப்பி தராததை அடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
ஜகஜால கில்லாடி உரிமை
இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.
உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
சிவாஜி வீடு ஜப்தி
அந்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பதில்மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்ட போதும், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications