தூணிலும் வரி.. துரும்பிலும் வரி.. மிடில் கிளாஸ்களுக்கு ஷாக்! பட்ஜெட்டிற்கு பின் என்னவெல்லாம் மாறும்!
சென்னை: மத்திய அரசு 2024 மத்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு முறைகளில் மாற்றங்களை செய்து உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி விதிப்பில் புதிய மாற்றங்களை செய்துள்ளார்.
நேற்று பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள வருமான வரி மாற்றம் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மாத ஊதியம் பெறுவோருக்கு நிரந்தர கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் - ரூ.7 லட்சம் பெறுவோருக்கு 5% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் - ரூ.10 லட்சம் பெறுவோருக்கு 10% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் - ரூ12 லட்சம் பெறுவோருக்கு 15% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் - ரூ.15 லட்சம் பெறுவோருக்கு 20% வரி விதிக்கப்படும், என்று சிறிய அளவிலான மாற்றங்களே செய்யப்பட்டு உள்ளன.
அதிக வரி: வருமான வரி (வருமான வரி) மற்றும் கார்ப்பரேட் வரி என இரண்டு கூறுகளைக் கொண்ட நேரடி வரிகளில் இந்தியா தொடர்ந்து உயர்வை கண்டு வருகிறது. இதில் கவலை அளிக்கும் விஷயம் 2022-2023ல் கார்ப்பரேட் வரிகளை முந்தி உள்ளது தனிநபர் வருமான வரி. கார்ப்பரேட் நிறுவனங்களை விட, பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், வரிகளில் அதிக பங்களிப்பு செய்கின்றனர்.
அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். நீங்கள் வரி செலுத்துவீர்கள். உங்கள் நிறுவனம் வரி செலுத்தும். உதாரணமாக உங்களின் வருமானம் 2 லட்சத்திற்கு நீங்கள் செலுத்தும் வரியை விட.. உங்கள் நிறுவனம் செலுத்தும் வரி குறைவாக இருக்கும். வரி அடிப்படை அதிகமாக இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கார்ப்பரேட் வரியை விட வருமான வரி குறைவு. அமெரிக்காவில் 43% மக்கள் வரி செலுத்துகிறார்கள், இந்தியாவில் 2% பேர் வரி செலுத்துகிறார்கள்.
ஜிஎஸ்டியை விட அதிகம்: 2019-ல் கார்ப்பரேட் வரியை அரசாங்கம் குறைத்துள்ளது, இதனால் ஆண்டுக்கு ரூ. 1.44 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. 2020 முதல் 2023 நிதியாண்டு வரை, கார்ப்பரேட் லாபம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ம் ஆண்டு கார்ப்ரேட் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், 2023-24ம் நிதியாண்டில் அரசுக்கு ரூ.922,675 கோடி கார்ப்ரேட் வரியாகவும், ரூ.1,022,325 கோடி தனி நபர் வருமான வரியாகவும் கிடைத்தது. மக்கள் தொகையில் 2% உள்ள வருமான வரி செலுத்துவோர், கார்ப்ரேட்களை விட அதிக வரியை செலுத்துகிறார்கள்.
தனிநபர் வருமான வரி (30%) கார்ப்பரேட் வரியை (27%) விட அதிகமாகவும், ஜிஎஸ்டியை விட (28%) அதிகமாகவும் உள்ளது.
மூலதன ஆதாய வரி: இது போல நீண்ட கால மூலதன ஆதாய வரியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொருளாதார நிபுணர் காங்கிரஸ் துணை தலைவர் ராம சுகந்தம் செய்துள்ள விளக்கத்தில், சொத்துகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய (எல்டிசிஜி) வரியை 12.5% ஆகக் குறைத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
ஆனால், சொத்து விற்பனையின் போது அதன் மதிப்பை கூட்டிக்காட்ட LTCG வரிக் கணக்கீட்டிற்கான குறியீட்டை நீக்கியுள்ளார். இது நம்மை எவ்வாறு பாதிக்கிறது?
எளிய கணக்கீடு மூலம் அதை பார்ப்போம் : நீங்கள் ஜனவரி 2009 இல் ₹50 லட்சத்திற்கு ஒரு அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று ₹1.5 கோடிக்கு விற்றீர்கள். குறியீட்டுடன் ஒப்பிடும்போது, 15 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் செலுத்திய ₹50 லட்சம் இன்றைக்கு ₹1.32 கோடியாகக் கருதப்படுகிறது.
எனவே, நிகர லாபம் அல்லது மூலதன ஆதாயம் ₹17.5 லட்சம் மட்டுமே, மேலும் 20% என்ற விகிதத்தில் மூலதன ஆதாய வரியாக ₹3.5 லட்சம் மட்டுமே தற்போது செலுத்த வேண்டும். ஆனால் குறியீடு இல்லாமல், உங்கள் மூலதன ஆதாயம் இப்போது ₹1 கோடியாகும், மேலும் 12.5% ஆக குறைந்தாலும், நீங்கள் வரியாக ₹12.5 லட்சம் செலுத்துவீர்கள். இதனால், பழைய முறையை விட அரசுக்கு கூடுதலாக ₹9 லட்சம் வருவாய் கிடைக்கிறது.
ஒரு சொத்தை வாங்கி 15 வருடங்கள் வைத்திருந்த பிறகு உங்கள் நிகர லாபம் வெறும் ₹5,01,825. ஆனால் அந்த சொத்திற்காக, கடன் வட்டியில் மட்டும் நீங்கள் அதிகம் செலுத்தியிருப்பீர்கள். அது உண்மையில் மதிப்புள்ளதா? இதை நீங்கள் புத்திசாலித்தனம் அல்லது வக்கிரம் என்று அழைப்பீர்களா? இந்த உதாரணத்தில், நீங்கள் குறைந்தபட்சம் மூலதன ஆதாயங்களை (LTCG) செலுத்த லாபம் ஈட்டியுள்ளீர்கள்.
ஆனால், உதாரணத்திற்கு நீங்கள் ஜனவரி 2018 இல் ₹80 லட்சத்திற்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி, அவசரத் தேவை காரணமாக இன்று ₹95 லட்சத்துக்கு விற்றதாக எடுத்துக் கொள்வோம். இங்குதான் கடினமாகிறது. குறியீட்டு முறை பொருந்தியிருந்தால், நீங்கள் உண்மையில் ₹11.76 லட்சம் நஷ்டம் அடைந்து, 'ஜீரோ' LTCG வரியைச் செலுத்தியிருப்பீர்கள். ஆனால் புதிய முறையில், நிர்மலா சீதாராமன் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சி இருக்கிறார். உங்களிடமிருந்து ₹1.87 லட்சத்தை எல்டிசிஜியாக எடுத்துக்கொள்வார். உங்கள் நிகர இழப்பு ₹13.63 லட்சமாகிறது. அதேவேளையில் நீங்கள் கடனுக்கான வட்டிக்கு மட்டும் பல லட்சங்கள் அதிகமாக செலவழித்திருப்பீர்கள்.
குறியீட்டை அகற்றுவது LTCGயின் முழு நோக்கத்தையும் தோற்கடிக்கிறது. இது அனைவரையும் பாதிக்கிறது மற்றும் அதிகமான மக்கள் தங்கள் பரிவர்த்தனைகளை குறைத்து மதிப்பிடுவதற்குத் தள்ளும், கறுப்புப் பணத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும். இது ரியல் எஸ்டேட் முதலீடுகளை குறைவானதாக்குகிறது மற்றும் நமது கட்டுமானத் துறையை இன்னும் பெரிய நெருக்கடிக்குள் தள்ளக்கூடும்.காஸ்ட் இன்ஃப்ளேஷன் இன்டெக்ஸ் (CII) பற்றித் தெரியாதவர்களுக்கு, 2001-02ல் ₹100 இன் மதிப்பு இப்போது ₹363 ஆக இருப்பதைக் காட்டுகிறது. உண்மையில் அப்படியா? நடுத்தர வர்க்கத்தினரை தண்டிக்க மோடி அரசு எப்படி வழிகளைக் கண்டுபிடிக்கிறது என்பது இதில் இருந்து புரியும், என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications