idli kadai : கரூர் விவகாரத்தால் அமுங்கிப் போன இட்லி கடை எப்படி இருக்கு.. தனுஷ்க்கு வந்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை வெளியாகிறது. இப்படத்திற்காக தனுஷ் ஏராளமான புரோமோஷன் வேலைகளை செய்திருந்தார். படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருந்தது. ஆனால் கரூர் சம்பவம் காரணமாக இட்லி கடை படம் வருவததே மக்களுக்கு தெரியாத அளவிற்கு அமுங்கி போனது. புக்கிங் ஓபன் ஆனதே பலருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது விறுவிறுப்பாக புக் ஆகி வருகிறது.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1ம் தேதியான நாளை (ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு) வெளியாகிறது.

இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. மேலும், மதுரை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு சென்று புரமோஷன் செய்தார் தனுஷ். அதில் சிறு வயதில் இட்லி வாங்கி சாப்பிட காசில்லாமல் தனது சகோதரிகளுடன் சேர்ந்து பட்ட கஷ்டத்தை தனுஷ் கூறியிருந்தார். அப்போது தனுஷ் கூறும் போது, சிறுவனாக இருந்தபோது, கிராமத்தில் இருந்த ஒரு இட்லிக் கடையில் தினமும் எப்படியாவது இட்லி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால், கையில் காசு இருக்காது.
இட்லி சாப்பிட பணம் சேர்ப்பதற்காக, தனுஷ், அவரது அக்கா மற்றும் உறவினர்களும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து வயலில் பூ பறிக்கும் வேலைக்குச் செல்வார்களாம். சுமார் இரண்டரை மணி நேரம் பூ பறித்துக் கொடுத்தால், ஆளுக்கு இரண்டு ரூபாய் கூலியாகக் கிடைக்கும். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு சென்று இட்லி சாப்பிட்டார்களாம்..
உழைத்துச் சாப்பிடும்போது கிடைக்கும் சுவையும், நிம்மதியும் பெரிய உணவகங்களில் கூடக் கிடைக்கவில்லை என்று கூறிய தனுஷ், அந்தக் கிராமத்து இட்லிக் கடையை மையமாக வைத்து ஏன் ஒரு படம் எடுக்கக்கூடாது என்று தோன்றியதாக தெரிவித்தார். மேலும், தன் சிறு வயதில் மனதைப் பாதித்த உண்மையான கதாபாத்திரங்களையும், சென்னை வந்த பிறகு சந்தித்த சில உண்மைச் சம்பவங்களையும் வைத்து 'இட்லி கடை' கதையை எழுதியதாக தனுஷ் மேடையில் உருக்கமாக கூறியிருந்தார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசும் போது, தன்னுடைய அம்மா கருவுற்றிருந்தபோது தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் இருந்து மதுரைக்கு 120 கிலோமீட்டர் நடந்தே வந்ததாக கூறினார்.. தான் இன்று இந்த மேடையில் நிற்பதற்குக் காரணம் அவர்களின் தியாகம்தான் என்று மிகவும் உணர்ச்சிவயத்துடன் பேசியிருந்தார். இப்படி தனுஷ் இட்லி கடை படம் பற்றி உருக்கமாக பேசி பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தார்.
ஆனால் கடந்த சனிக்கிழமை கரூரில் விஜய் சென்றிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியது. இதையடுத்து புரமோஷன் நிகழ்ச்சி வேண்டாம் என தனுஷ் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சத்தமே இல்லாமல் தனுஷின் இட்லி கடை நாளை வெளியாக இருக்கிறது. நாளை முதலே விளம்பரங்கள் முழு அளவில் செய்யப்படும் என தெரிகிறது
இதனிடையே இட்லி கடை திரைப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் சிலரும், சென்சார் குழுவை சேர்ந்தவர்களும் படம் சிறப்பாக வந்துள்ளதாக கூறியதாக தகவல்கள் பரவி உள்ளது. படத்தை பிரிவியூ பார்த்தவர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறியிருக்கிறர்களாம். நாளை திரையரங்கில் வெளியாகிறது. எப்படி இருக்கிறது என்பது காலையிலேயே தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications