டாக்டர் சுப்பையா கொலை வழக்கு.. சிசிடிவி ஆதாரம் இருந்தும் தீர்ப்பு குற்றவாளிகளுக்கு சாதகமானது எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் சிசிடிவி ஆதாரம் இருந்தும் 9 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எப்படி தண்டனை பெற்றவர்களுக்கு சாதகமானது என்பதை பார்ப்போம்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையாவுக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். அங்கு டாக்டர் சுப்பையாவுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்து காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி குடும்பத்தினருக்கும், டாக்டர் சுப்பையாவுக்கும் பெரும் பிரச்சினை ஏற்பட்டது.

இந்த சூழலில் டாக்டர் சுப்பையாவை கடந்த 2013-ம் ஆண்டு மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர்.. இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஆசிரியர் பொன்னுசாமி உள்பட 10 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதில் அய்யப்பன் என்பவர் 'அப்ரூவராக' மாறியதால் வழக்கு விரைவில் முடிவுக்கு வந்தது.
டாக்டர் சுப்பையா மரண வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், 'பொன்னுசாமி, அவரின் மகன்களான வக்கீல் பாசில், என்ஜினீயர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, வழக்கு ஆவணங்களை செசன்சு நீதிமன்றம் அனுப்பி வைத்தது.
இது ஒருபுறம் எனில், தண்டனை பெற்றவர்கள் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் நேற்று பிறப்பித்தனர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்த கொலையை நேரில் பார்த்த சாட்சிகளிடம் போலீசார் உடனே விசாரணை நடத்தவில்லை. காலதாமதமாக விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றுள்ளார்கள்.
பொதுவாக இதுபோன்ற குற்ற வழக்குகளில் கண்ணால் கண்ட சாட்சிதான் மிகவும் முக்கியமானவர்கள் . எனவே அவர்களிடம் தான் முதலில் போலீசார் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இந்த வழக்கில் விசாரிக்கப்படவில்லை. எனவே, இவர்களது சாட்சியத்தை ஏற்க முடியாது. அதேபோல, இந்த வழக்கில் 'அப்ரூவராக' மாறிய அய்யப்பன், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலமும், மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலமும் முரண்பாடாக இருக்கிறது. இவற்றை எல்லாம் கீழ்கோர்ட்டு சரியாக பரிசீலிக்காமல் தண்டனை வழங்கியுள்ளது.
எனவே இந்த வழக்கில் குற்றச்சாட்டை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என்று முடிவு செய்கிறோம். இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்கிறோம்.
பொன்னுசாமி உள்பட 9 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையையும், ஆயுள் தண்டனையையும் ரத்து செய்கிறோம். இவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லையென்றால், 9 பேரையும் உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பின் காரணமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரும் தப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications